Thursday, April 26, 2018

இயற்கை முறையில் தென்னை சாகுபடி: லட்சங்களைக் குவிக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்

இயற்கை முறையில் தென்னை சாகுபடி: லட்சங்களைக் குவிக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்

விவசாயத்தைக் கைவிட்டு நகர்ப்புறங்களுக்கு குடிபெயரும் இன்றைய சூழலில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் இப்போது விவசாயத்துக்குத் திரும்பியுள்ளார்.

அதுவும் இயற்கை வேளாண் முறையின்மூலம் லட்சங்களைக் குவிக்கும் லாபகரமான தொழிலாகவும் விவசாயத்தை மாற்றி மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார் மருதமுத்து.
இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடித்து தென்னை சாகுபடி செய்தால் ஒரு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம் என்பதை இவர் நிரூபித்துள்ளார். பட்டதாரி ஆசிரியரான தனது மனைவியுடன் கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயமும் லாபகரமான தொழில்தான் என்பதை நிரூபித்துள்ளார்.

திண்டுக்கல் அருகே தவமடையில் 9 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் இயற்கை முறையில் தனது மனைவி வாசுகியுடன் இணைந்து தென்னை, ரோஜா, சம்பங்கி மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்.
தனது அனுபவத்தைப் பற்றி அவர் கூறியது: "ஒவ்வொருஇளைஞர்களிடம் விவசாயி என்ற உள்ளுணர்வு தூங்கிக் கொண்டிருக்கிறது. அதைத்தட்டி எழுப்பினால் அவன் விவசாயியாகி விடுவான். சென்னையில் சாஃப்ட் வேர்இன்ஜினியராக லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும், மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியவில்லை.ஓய்வே இல்லாமல் ஓடிய நகர்ப்புற வாழ்க்கை மீது எனக்கு ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டியது. இந்தத் தொழிலை விட்டால் அடுத்து விவசாயம்தான் என்னுடைய தேர்வாக இருந்தது. அன்றாடம் விவசாயிகள் தற்கொலைனு வரும் செய்திகள் என்னை மிரட்டின. விவசாயித்தில் கால் அனாகாசு கூட மிஞ்சாதுப்பா என்று பலர் கூறினர்.
இயற்கை விவசாயம் என்றதும்,அதுவெல்லாம் நம்ம நிலத்தில் சாத்தியமில்லைனு பயமுறுத்தினர். விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றி ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற வெறி எனக்குள் இருந்தது. சொந்த ஊரில் 9 ஏக்கர் நிலம் வாங்கினேன். விவசாயம் செய்யத் தொடங்கினேன். படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலையை பார்க்காமல் விவசாயம் செய்ய வந்துட்டான்னு என்னை ஏளனம் செய்யாதவர்களே கிடையாது.
இன்று அவர்களே என்னிடம், என்ன பயிர் செய்யலாம், என்ன ரகம் பயிரிடலாம் என ஆலோசனை கேட்கின்றனர்.அந்த அளவுக்கு என்னுடைய தோட்டத்தில் இயற்கை முறையில் பயிரிட்ட தென்னை, சம்பங்கி, கால உணவு பயிர்களை ஒவ்வொன்றிலும் கைநிறைய வருமானம்கிடைக்கிறது.
கூலி வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்வதில்லை. நானும்,எனது மனைவியுமே நாற்று நடுவோம். தண்ணீர் பாய்ச்சுவோம். அறுவடை செய்வோம். மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்வோம். பெருமைக்காக சொல்லவில்லை. என்னை பார்த்து 100 இளைஞர்கள் விவசாயத்திற்கு வரனும்னு நினைச்சேன். இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் 20, 30 படித்தவர்கள் விவசாயம்செய்கின்றனர். இது என்னுடைய இயற்கை விவசாயத்திற்கு கிடைத்த வெற்றி என்றார்.
திண்டுக்கல்லில் கடந்த 4 ஆண்டாக மழையே இல்லை. மாவட்டத்தில் 60 சதவீதம்தென்னை மரங்கள் அழிந்துவிட்டன. ஆனால், என்னுடைய தோட்டத்தில் ஒரு தென்னமரம் கூட பட்டுப் போகவில்லை. மொத்தம் 250 தென்னை மரங்கள் வைத்துள்ளேன். ஒரு மரத்தில் சாதாரணமாக 40 காய் கிடைக்கிறது. மாதம் 45 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இவ்வளவுக்கும் தண்ணீரே பாய்ச்சுவதில்லை.
பராமரிப்பு செலவே இல்லை. அதற்குக் காரணம், இயற்கை விவசாயம் முறையில் செய்த நடவுமுறை. 4-க்கு 4 அடி என்ற அளவில் குழி தோண்டி, அதில் கப்பி மணல் கொட்டினேன். மாட்டு சாணம், சிறுநீரை அடி உரமாக போட்டு தென்னை மரக்கன்றுகளை நட்டேன். தென்னை மரம் அதிக தண்ணீரை ஈர்க்கும். கப்பி மணல் போட்டதால் மழைக் காலத்தில் தண்ணீரை ஈர்த்து வைத்துக் கொண்டு 3 முதல் 6 மாதம் வரை மரத்திற்கு தண்ணீர் கொடுக்கிறது. ஒரு தென்னை மரத்தின் வயது 80 ஆண்டு.
மனிதனின் சராசரி ஆயுள் 60 ஆண்டு. இயற்கை விவசாயத்தில் தென்னை மரங்களைப் பயிரிட்டால் ஒரு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். 60 சென்ட் நிலத்தில் சம்பங்கி பயரிட்டுள்ளேன். இதிலும் ஆண்டுக்கு ரூ. 5.50 லட்சம் வருமானம்கிடைக்கிறது. செலவு போக மாதம் 30 ஆயிரம் லாபம் கிடைக்கிறது. என்னுடையஅடுத்த இலக்கு ரோஜா. இப்போதுதான் ரோஜாவை இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்துள்ளேன். இதிலும் நிச்சயம் ஜெயிப்போம்'' என்றார் நம்பிக்கையுடன்.
அவருடைய அனுபவங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள 9787642613 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

தாய் தென்னை மரங்களை தேர்ந்தடுக்கும் முறைகள்

தாய் தென்னை மரங்களை தேர்ந்தடுக்கும் முறைகள்

தென்னையின் ரகங்கள் :
  • தென்னை மரங்களில் பல்வேறு இயல்புகள் கொண்ட ரகங்கள் காணப்படுகின்றன. நமது நாட்டில் மேற்கு கடற்கரை நெட்டை, கிழக்கு கடற்கரை நெட்டை என்ற இரண்டு ரகங்கள் பரவலாக காணப்படுகிறது.
  • மேற்கு கடற்கரை நெட்டை ரகங்கள் தடித்து பருமனாகவும், பெரிதாகவும் இருக்கும். இது ஆண்டுக்கு 80-100 காய்கள் காய்க்கும்.
  • கிழக்கு கடற்கரை நெட்டை ரகங்களின் காய்கள் பருமன் சற்று குறைந்து காணப்படும். இது ஆண்டுக்கு 100-120 காய்கள் வரை காய்க்கும்.
  • தழிழகத்தில் ஈத்தாழி நெட்டை, அய்யம்பாளையம் நெட்டை போன்ற பல்வேறு ரகங்கள் காணப்படுகின்றன.
தாய் மரத்தின் குணம் :
  • தேர்வு செய்யப்படும் தாய் மரமானது இலையழுகல், இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் தஞ்சை வாடல் நோய் போன்ற நோய்களால் தாக்கப்படாமல் இருக்க வேண்டும்.
  • மேற்கண்ட நோய்களால் தாக்கப்பட்ட மரங்கள் உள்ள தோப்பில் மற்ற ஒரு சில மரங்கள் இந்த நோய்களினால் தாக்கப்படுவதில்லை. அத்தகைய வலுவான நோய் எதிர்ப்பு தன்மையுள்ள மரங்களை தாய் மரங்களாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • 4 முதல் 5 ஆண்டுகளில் காய்க்க தொடங்கிய மரங்களில் இருந்து தாய் மரங்களை தேர்ந்தெடுக்கலாம்.
  • ஒவ்வொரு ரகத்தின் விளைச்சலை ஒப்பிட்டு பார்த்து அதன் மூலமும் தாய் மரங்களை தேர்ந்தெடுக்கலாம்.
  • நல்ல முளைப்பு திறன் மற்றும் ஒரே சீரான வீரியம் உடைய கன்றுகளை தரும் மரங்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.
நடவு செய்யும் குழியின் அளவு :
  •  தென்னங்கன்றுகளை வாழை போன்ற மரங்கள் நடப்படும் சிறிய குழிகளில் நடாமல் 3 அடி ஆழம், 3 அடி அகலம் உள்ள குழிகளில் நட வேண்டும்.
  • 3 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழிகளில் 1 அடி ஆழத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட மண்ணை, வேர்பகுதியில் வேர்களுடன் காணப்படும் காய்ப்பகுதி ஒரு அடி இருக்குமாறு கையால் ஒரு அடி குழி எடுத்து காயை குழியில் பதித்து குழியை மூடி விட வேண்டும்.
  • பின்னர் ஒரு வாரம் கழித்து நீர் பாசனமுறைப்படி நீர் பாய்ச்ச வேண்டும். தேவைப்பட்டால் தென்னை அல்லது பனை ஓலையை வைத்து வெயில் படாதவாறு 3 மாதம் வரை பாதுகாக்கலாம்.
  • தென்னங்கன்றுகளை நட்டபின் குழியினுள் 2 அடி ஆழம் இருக்க வேண்டும். இந்த நிலையில் காயின் மேல் பகுதியில் மண் விழாதபடி இருந்தால் வண்டு தாக்குதலும், குருத்தோலை தாக்கப்படாமலும் பாதுகாத்துக் கொள்ளலாம்

ஆண்டுக்கு 300 இளநீர் காய்க்கும் அதிசய தென்னை... திருப்பூர் விவசாயி கண்டுபிடிப்பு


ஆண்டுக்கு 300 இளநீர் காய்க்கும் அதிசய தென்னை... திருப்பூர் விவசாயி கண்டுபிடிப்பு


வழக்கமாக தென்னை மரம் ஒன்றில் இருந்து அதிகபட்சமாக ஆண்டுக்கு 140 தேங்காய் வரைதான் அறுவடை செய்யமுடியும். ஆனால், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த உமாபதி என்கிற விவசாயி. அவரது தோட்டத்தில் இருக்கும் நாட்டுரக தென்னை மரங்களுடன், ஆந்திரா மாநிலத்தின் குட்டை ரக தென்னை மரங்களையும்  அவரது தோப்பில் பல ஆண்டுகள் வளர்த்து, அந்த இரண்டு ரகங்களின் பூக்களையும் மகரந்த சேர்க்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய ரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அந்த ரகத்துக்கு ராம் கங்கா என்கிற பெயரையும் சூட்டியுள்ளார். முதலில் தனது வயலில் அந்த புதிய ரக தென்னை நாற்றுக்களை நடவு செய்து முறையாக பராமரித்து, 5 ஆண்டுகள் கடந்த பிறகு, கையில் எட்டிப்பறிக்கும் உயரத்தில் தென்னையா? திராட்சையா? என்கிற விதமாக குலை குலையாக காய்ப்பு தொங்கி பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது.இந்த புதிய ரக தென்னை கண்டிபிடிக்கும் ஐடியா எப்படி வந்தது என்று உமாபதியிடம் கேட்டோம்.. மனிதர் ஆர்வமுடன் பதில் சொல்ல தொடங்கினார்..
‘‘தென்னையில் அதிக மகசூல் தேவை என எனது நண்பரான முன்னோடி தென்னை விஞ்ஞானி O.V.R சோமசுந்தரத்திடம் கூறினேன். அவர்தான் கங்காபாண்டம் என்கிற குட்டை ரக தென்னை மற்றும் மேற்கு  கடற்கரை நெட்டை ரகம் இரண்டையும் இணைக்கும் புதிய தொழில்நுட்பத்தை கற்றுத்தந்தார். ஆனா, மேற்கு கடற்கரை நெட்டை ரகம்தான் தமிழ்நாட்டில் அதிகம் இருக்கு. இதில் காய்ப்பு குறைவு ஆனால், இளநீர் ருசியா இருக்கும். கங்காபாண்டத்தில் இளநீர் அதிகம் கிடைக்கும் ஆனால் ருசி மந்தமாக இருக்கும்...அதனால, இந்த இரண்டு ரகத்தையும் இணைச்சு, ருசியான அதிக இளநீர் கிடைக்ககூடிய ஒரு புதிய ரகத்தை உருவாக்கினோம்.
பனை மரத்தில் ஆண் மரம் பெண்மரம் என்று பால் வேறு பாடு உண்டு. ஆனால், தென்னை மரங்கள் இருபாலினம் வகையைச் சேர்ந்தது. ஆண்பூவும், பெண்பூவும் ஒரே மரத்தில் இருக்கும்.. ஆனால், செய்த தொழில்நுட்பம் வேறு விதமானது, ஆந்திராவின் கங்கா பாண்டம் தென்னை மரங்களை பெண் மரங்களாகவும், மேற்கு கடற்கரை நெட்டை மரங்களை ஆண் மரங்களாகவும் வைத்து ஒன்றின் மகரந்தங்களை இன்னொன்றில் செயற்கையாக வைத்து அதன் மூலம் வரும் தேங்காய்களில் இருந்து புதிய ரகத்தை உருவாக்கி வருகிறேன். அந்த ரகத்துக்கு ராம் கங்கா என்று பெயரை சூட்டியுள்ளேன். இந்த ரகத்துக்கு கொச்சியில் உள்ள மத்திய தென்னை வாரியம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் என்னை அணுகி கன்றுகளை வாங்கி நடவு செய்து வெற்றிகர இளநீர் விவசாயி என்று பெயர் வாங்கியுள்ளார்கள். தண்ணீர் தேங்கி நிற்காத அனைத்து மண்ணிலும் இந்த ரகம் சிறப்பாக வளரும். மரம் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு மழையில்லாத நாட்களில் குறைந்த பட்சம் 90 முதல் 150 லிட்டர் தண்ணீர் வரை கொடுத்தால் தரமான காய்ப்பு கிடைக்கும்.இது இயற்கையான முறையில் செய்யும் தொழில்நுட்பம்தான்" என்றார்.

தொடர்புக்கு: உமாபதி - 97153 71717உமாபதியிடம் தென்னை கன்றுகள் வாங்கி நடவு செய்துள்ள விவசாயிகளில் ஒருவர் பொள்ளாச்சி வட்டம் நெகமம் பகுதியை சேர்ந்த மணி கூறும்போது...

''குழந்தைகள்கூட எட்டிப்பறிக்கும் உயரத்தில் இளநீர் குலை குலையாக காய்த்து தொங்குகிறது. தலா இளநீர் தேங்காய் ஒன்றில் இருந்து அதிகபட்சமாக 300 - 750 மில்லி லிட்டர் வரை இளநீர் கிடைக்கிறது. மற்ற ரகங்களில் குறைவாக கிடைக்கும்.
இந்த ராம்கங்கா ரகத்தை நான் 6 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளேன். குலை முறிந்து விழும் அளவுக்கு காய்கள் பிடித்திருப்பதால், அதை கயறு போட்டு இழுத்து கட்டியுள்ளேன்.என்றார். இதில் 100 தேங்காய்க்கு 18 கிலோ வரை கொப்பரை கிடைக்கும்'' என்றார்.


Wednesday, April 25, 2018

எட்டி மரத்தின் பயன்கள்

 எட்டி மரத்தின் பயன்கள்

எட்டி மரத்தின் கொட்டைகள் பல ஆயிரம் டன்கள் மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகிறது ஆனால் உள்நாட்டில் இதன் பயன்பாடு வெகுவாக குறைக்கபட்டு மறக்கடிக்கபடுகிறது.
கொசுக்கள் என்னை கடிப்பதில்லையே ஏன்? என்ற பலவருட கேள்விகளுக்கு விடை கிடைத்தது, இருளர் இன மக்களின் மருத்துவம் அதாவது எப்பேர்பட்ட பாம்பு ,தேள் போன்றவை கடித்தாலும் எட்டியை மருந்தாக கொடுத்தால் பிழைத்து கொள்ளலாம். பாம்பு பிடிப்பதை தொழிலாக செய்யும் பழங்குடியினர் வருடத்திற்கு ஒரு மண்டலம் எட்டிவிதை கற்பத்தை எடுத்து கொள்வதை கவனத்தில் கொள்வோம். தேன் பூச்சிகளும் கடிப்பதில்லை இவர்களை. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது கட்டுவிரியன் பாம்பு கடித்து மிகவும் அபாயமான கட்டத்தில் இருந்து என்னை எட்டி விதை,மற்றும் மரத்தின் பட்டையை கசாயமாக கொடுத்து காப்பாற்றினார்கள். அன்றிலிருந்து இன்று வரை கொசுக்கள் என்மீது வந்து அமரும் ஆனால் கடிக்காமல் பறந்து போய்விடும்.
ஆங்கில மருத்து மாத்திரைகலால் உடலில் ஏற்பட்டு இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற Nux Vomica(நக்ஸ்வாமிகா) எனப்படும் நஞ்சு முறிவு மருந்தை ஹோமியோபதி மருத்துவர்கள் பயன்படுத்தி உடலின் நச்சு தன்மை வெளியேற்றிய பின்பே வைத்தியம் பார்கிறார்கள் என கருதுகிறேன். இந்த மருந்து எட்டி விதைகளில் இருந்து தயாரிக்கபடுகிறது.
மேலை நாடுகளில் இந்த Nux Vomica Tinctureஐ பயன்படுத்தி இருதய வியாதிகளை குணபடுத்தியதாக செய்திகளில் படித்தது உண்டு.
மேலும் முகவாதம் எனப்படும் நோயை போக்க சீன மருத்துவத்தில் எட்டியில் இருந்து எடுக்கப்படும் மருந்து பயன்படுத்தபடுகிறது. இதில் சிட்ரக்னைன்,புருனைன்,வாடிசைன் எனப்படும் மூன்று முக்கிய அல்காய்டுகள் உள்ளன.
நடைமுறையில் எட்டி மரத்தின் பயன்கள்.
1. பெண்களுக்கு பேய் பிடித்தல் எனப்படும் இஸ்டீரியா மயக்கநோய் ஏற்பட காரணமாக இருப்பது கருப்பையின் சுற்று புறங்களில் உள்ள இரத்த நரம்புகள் பாதிக்கப்படுவதால் இந்த குறைபாடு உண்டாகிறது. அதனை போக்க எட்டி மரத்து வேரை எடுத்து நீர் சேர்த்து இரண்டில் ஒரு பாகமாக காய்ச்சி கொடுக்க நோய் குணமாகிறது இதே கசாயத்தை பயன்படுத்தி இருதய கோளாறுகளையும் சரி செய்யலாம்.
2.எட்டி கற்பத்தை பயன்படுத்தி நரம்பு மண்டலத்தை பலப்படுத்தலாம் அதன் மூலம் மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும் அதிகமாக கோபபடுதல், சாரயம் போன்ற போதை மீதான இச்சைகள் தீரும்.
எட்டி கற்பம் செய்முறையில் பல முறைகள் இருக்கிறது இது ஒரு எளியமுறை. தேவையான அளவு எட்டி விதைகளை நெல் உமியின் மீது பரப்பி உமியை எரிக்க எட்டிவிதை எரிந்து திருநீறு போலாகிவிடும் அதை எடுத்து சிறிதளவு தேனுடன் கலந்து சாப்பிட்டபின் வெள்ளாட்டுபால்//மாட்டுபால் குடித்து வர உடலானது வன்மையாக மாறும் பெண்போகம் அதிகரிக்கும்,அதை கட்டுபடுத்தி உடலை வளமாக்க ஆயுளை நீட்டிக்கும் என ஏடுகளில் குறிப்புகள் உண்டு. ஆயுளை அதிகரிப்பதில் எட்டி கற்பத்திற்கு பெரும் பங்கு உண்டு. காபி டீக்கு மாற்றாகவும் இதனை பயன்படுத்தலாம் பனங்கற்கண்டு சேர்த்து. சிறப்பான பலன் உண்டு.
3.ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மல்கான்கிரி பகுதியில் இருக்கும் பழங்குடியினர் எட்டிமரங்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் இருக்கும் வௌவால்களை கொன்று அதன் மாமிசத்தை பயன்படுத்தி குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோயை குணபடுத்துகின்றனர் இதை நான் கண்டுணர்ந்த விடயம். வௌவ்வால்கள் எட்டி பழங்களை அதிகமாக விரும்பி உண்ணும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
4.சுத்தி செய்த எட்டிவிதைகளை தாது விருத்தி லேகியங்களில் சேர்ப்பார்கள் இது நரம்பு மண்டலம் சார்ந்த அனைத்தையும் துரிதமாக்கும்.
5.எட்டிமரத்தின் தண்டுபகுதியை(பட்டையை உரித்த பின்பு)எடுத்து காயவைத்து பொடித்து சலித்து வெந்நீரில் பயன்படுத்த வாதநோய்கள் தீரும். அதே வேலையில் எட்டி இலைகளை போட்டு தண்ணீரில் கொதிக்க வைத்து பயன்படுத்தி வர வாதம் சம்மந்தமான கோளாறுகளும் தீரும்.
6.மலைவாழ் மக்கள் உடலில் ஏற்படும் கட்டிகளை கரைக்க எட்டிமரத்தின் துளிரை அரைத்து வெண்ணெய் சேர்த்து தடவு கட்டிகள் கரைந்து அமுங்கி விடுகிறது. இப்போதும் வழக்கில் உள்ளது.
7.கடுமையான ஒற்றை தலைவலி தீர; கைபிடியளவு எட்டி கொழுந்து,20 மிளகு , 10 பள்ளு பூண்டு சேர்த்து நல்லெண்ணெய்யில் சேர்த்து காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர ஒற்றை தலைவலி தீரும்.
8. மிகச்சிறந்த வலி நிவாரணியாகவும்//மயக்க மருந்தாகவும் இதனை பயன்படுத்தலாம் நரம்புமண்டலத்தை பாதிக்காமல். எட்டிவிதையுடன் சிறிதளவுகஞ்சா சேர்த்து மயக்கமருந்து செய்யலாம். தமிழ் மருத்துவ முறைளில் இது உண்டு.
9.நரம்பு மண்டலம் மற்றும் உடலின் நச்சுகளை வெளியேற்றும் சிறந்த துணை மருந்து எட்டி மரத்தின் பொருட்கள்.
10.கல்லீரல் நோயான வரட்டுகாமாலைக்கு எட்டி இலை ஏலெட்டு கால் லிட்டர் தண்ணீரில் நான்கில் இரு பாகமாக காய்ச்சி கொடுக்க வரட்டு காமாலை குணமாகும்.
"எட்டி காய்த்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன" இந்த பழமொழியை ஏன் எதற்காக பயன்படுத்தினர் இதன் கால கட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் ஏனெனில்......
காளங்கிநாதர்,தேரையர்,புலிப்பாணி, அகத்தியர் போன்ற சித்தர்கள் எட்டியின் மகிமையை சிலாகித்தே உள்ளனர். ஔவையார் அவர்களும் இதனை காஞ்சிரங்காய் என்று குறிபிடுகிறார்
இப்பேர்பட்ட மதிப்பு மிக்க மூலிகை மரத்தை நாம் சரியாக பயன்படுத்த தவறியதற்கு பின்னால் உள்ள அரசியல் என்ன ஏன் என்பது விளங்கவில்லை....
இதனை சரியான முறையில் சுத்தி செய்து மட்டுமே பயன்படுத்த வேண்டியது அவசியம். சரியான முறையில் பயன்படுத்தாத போது உடலில் வாந்தியோ மயக்கமோ ஏற்பட்டால் நாவல் மரத்தின் பட்டையை கசாயமாக கொடுக்க குறைபாடு நீங்கும் .மேலும் எலுமிச்சை சாறு, சீரகதண்ணீர்,அகத்தி கீரை,புளித்தமோர் இதற்கு முறிவு மருந்து.

கால்நடைகளுக்கான முதலுதவிகள்

கால்நடைகளுக்கான முதலுதவிகள்

எலும்பு முறிவு
கொம்பு முறிதல்
இரசாயன திரவங்களால் ஏற்படும் காயங்கள்
வயிறு உப்புசம்
அமில நச்சு
யூரியா நச்சு
நஞ்சுத் தன்மை
வெறிநாய் கடி
பாம்பு கடி
தொண்டை அடைப்பு
கருப்பை வெளித்தள்ளுதல்.
உழவுத் தொழிலில் உற்ற தோழனாகவும், விவசாய்களின் ஏடிஎம் ஆகவும் விளங்குபவை கால்நடைகள். இவைகளுக்கு பல வேளைகளில் எதிர்பாராமல் ஏற்படுகிற விபத்துகள், நோய்கள் முலம் அவற்றின் உயிருக்கோ, உடல் நலத்திற்கோ தீங்கு ஏற்படலாம். தக்க மருத்துவம் செய்யும் முன் நம்மிடம் உள்ள மருந்துகளைக் கொண்டு பாதிப்பினை அதிகரிக்காமல் இருக்கச் செய்யும் உதவியே முதலுதவி ஆகும்.
கால்நடைகளுக்கான முதலுதவிகள்
1. காயங்கள் - கால்நடைகளுக்கு காயம் ஏற்பட்டால் முதலில் காயத்தை சுத்தமான நீரில் நோய்க்கிருமி எதிரியான டெட்டால் அல்லது சாவ்லான் கலந்து கழுவ வேன்டும். சுத்தமான துணியால் ஒற்றி எடுத்து டிங்ச்சர் அயோடின் அல்லது சல்பர் துளை போடவும். பின் கால்நடை மருத்துவரை அணுகவும்.
உடலில் புண் இருந்தால் ஈ முலம் புழுக்கள் உண்டாகி காயத்தை ஆழமாக்கி விடும். இதற்கு கற்பூரத்தை பொடி செய்து வைக்கலாம். அல்லது வேப்ப எண்ணெயை புண்ணின் மீது தடவலாம்.
எலும்பு முறிவு
எதிற்பாராத விபத்தினால் எலும்பு முறிவு ஏற்ப்பட்டால் முறிந்த நிலையிலேயே அதிக அசைவு ஏற்ப்படாத வகையில் மூங்கில், துணி கொண்டு கட்டுப்போட வோண்டும். பின்னங்கால் தொடை எலும்பு முறிவு ஆகியவற்றிற்கு மருத்துவம் செய்வது கடினம். எலும்பு முறிவு மற்றும் காயங்கள் ஒருசேர இருப்பின் அந்த காயங்களுக்கு கட்டுப்போட கூடாது. உடனே மருத்துவரை அணுகவும்.
கொம்பு முறிதல்
மாடுகள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொள்வதாலோ அல்லது வெளியில் மேயும்போதோ கொம்பு முறிய வாய்ப்புண்டு. நுனிக் கொம்பு முறிதல் பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த தண்ணீர் கொண்டு கழுவியபின் களிம்பு தடவலாம்.
இரத்தப் போக்கு அதிகமாக இருப்பின் அதன் மேல் துணியைச் சுற்றி டிங்சர் பென்சாயின் ஊற்றவும். கொம்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் ஈரம் மற்றும் அழுக்கு படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காயம் பட்ட இடத்தில் துற்நாற்றம் ஏதேனும் வருகிறதா என கவனமாக கவனிக்க வேண்டும். அவ்வாறு இருப்பின் உடனே மருத்துவரை அணுகவும்.
இரத்த கசிவு
கைகளை சுத்தமான நீர் அல்லது சோப்பால் கழுவி விட்டு இரத்தம் வரும் இடத்தில் விரல்களை வைத்து அழுத்தி பிடிக்க வேண்டும். இரத்த கசிவு அதிகமாக இருந்தால் சுத்தமான துணி கொண்டு கட்டுப் போடலாம்.
தீக்காயம்
கால்நடை கொட்டகைகள் தீப்பிட்டிப்பதால் உடம்பில் தீக்காயம் ஏற்படலாம். கால்நடைகளின் உடம்பில் தீப்பிடித்து எரிந்தால் அடர்த்தியான போர்வை அல்லது சாக்கு பை கொண்டு போர்த்த வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீர் ஊற்றவும். கால்நடைகளை நல்ல காற்றோட்டமான இடத்திற்கு கொண்டு செல்லவும்.
இரசாயன திரவங்களால் ஏற்படும் காயங்கள்
இரசாயன திரவங்கள் உடம்பில் பட்டால் தோல், தசை முதலியன வெந்துவிடும். அமில வகைத் திரவங்கள் உடம்பில் பட்டால் சோப்புத் தண்ணீர் அல்லது சோடா உப்பு கலந்த தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.
காரவகை திரவங்கள் உடம்பில் பட்டால் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். எந்த வகை இரசாயனம் எனத் தெரியாவிட்டால் நிறைய சுத்தமான தண்ணீர் கழுவ வேண்டும்.
மின்சார அதிர்ச்சி
கால்நடைகளின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தால் நினைவு இழத்தல் மற்றும் இறப்பு ஏற்பட வாய்ப்புண்டு। சில வேளை காயங்கள் ஏற்படாலாம். கால்நடைகளுக்கு மின் தாக்குதல் ஏற்பட்டால் உடனடிக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். பின்பே அருகில் செல்ல வேண்டும். கால்நடை கொட்டகையில் மின் கசிவு ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மின் கம்பங்களிலோ அல்லது அதன் அருகிலோ கட்டுவதை கண்டிப்பாக தவிர்க வேண்டும்.
அதிக உடல் வெப்பத்தால் ஏற்படும் அதிர்ச்சி
வெயில் காலங்களில் அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் போதுமான காற்றோட்டம் இல்லாத காரணங்களினால் கால்நடைகளுக்கு மூச்சுத்திணறல் மற்றும் வெப்ப அதிர்ச்சி ஏற்படும். எனவே கால்நடைகளை கால்நடைகளை நல்ல காற்றோட்டமான இடத்தில் நிழலில் கட்டிவைக்க வேண்டும்.
கோடைகாலத்தில் காலை அல்லது மாலை வேளைகளில் மேய்சலுக்கும் பிற வேலைகளுக்கும் அனுப்பலாம். வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் மீது ஈரத்துணி மற்றும் பனி(ஐஸ்) கட்டிகளை வைத்து உடல் வெப்பநிலையைக் குறைக்கலாம்.
வயிறு உப்புசம்
தீவனத்தை திடீரென மாற்றுவதாலோ அல்லது பயறுவகை தீவனத்தை அதிகமாக உட்கொண்டதாலோ வயிறு உப்புசம் ஏற்படலாம். இதற்க்கு கடலெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 250 மி.லி வாய் வழியே ஊற்ற வேண்டும்.
எண்ணெயுடன் சோப்புத்தண்ணீர் 60 மி.லி வாய் வழியாக கொடுக்கலாம். மருந்து ஊற்றும் போது புறை ஏற்படாமல் கவனமாக ஊற்ற வேண்டும்.
வயிறு உப்புசம் அதிகமாயின் கால்நடைகள் மூச்சுவிட சிரம்ப்படும். எனவே உடனே மருத்துவரை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவைமட்டும் அல்லாமல் உள்வயிறு சுழன்று கொள்வது, புளித்த உணவை அதிகமாக உட்கொள்வது, உண்ட பின் அதிகம் தண்ணீர் குடிப்பது ஆகியவற்றாலும் வயிறு உப்புசம் ஏற்படலாம்.
அமில நச்சு
மரவள்ளி இலை, தோல், கிழங்குப்பட்டை, இளம் சோளப்பயிர் ஆகியவற்றை அதிகமாக உண்பதால் இந்நச்சு பாதித்து கால்நடைகள் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே உயிர் சேதமடைந்துவிடும். எனவே உடனே மருத்துவரை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். இதனைத் தடுக்க மேற்கூறிய தீவனங்களை நன்கு வெயிலில் உலர்த்தி காயவைத்து கொடுக்க வேண்டும்.
மீந்து போன அரிசி – சாதம், அழுகிய வாழைப்பழம், தானியங்களை அதிகமாக உட்கொள்வதால் வயிறு உப்புசம் ஏற்படலாம். இதனால் கால்நடைகள் மூச்சுவிட சிரம்ப்படும். இதற்கு 100 கிராம் சமையல் சோடாவை 500 மி.லி தண்ணீரில் கரைத்து 2 அல்லது 3 முறை கொடுக்கவும். உடனே கால்நடை மருத்துவரை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் வயிற்றுப் போக்கு மருந்து கொடுக்க வேண்டும்.
யூரியா நச்சு
தவறுதலாக யூரியாவை மாடுகள் தண்ணீர் குடிக்கும் தொட்டியில் கலப்பதாலோ, அல்லது யூரியா உரமிட்ட வயலில் தண்ணீர் குடிப்பதாலோ யூரியா நச்சு ஏற்படலாம். வாயிலிருந்து எச்சில் மற்றும் நுரைவடிதல், மூச்சுவிட சிரமப்படுதல், வலிப்பு ஏற்படுதல் ஆகியன முக்கிய அறிகுறிகள். முதலுதவியாக கறவை மாடுகள் மற்றும் எருதுகளுக்கு வினிகர்( 2 முதல் 4 லிட்டர் வரை பிரித்து) கொடுக்க வேண்டும். ஆடுகளுக்கு அரை லிட்டர் கொடுக்கலாம்
நஞ்சுத் தன்மை
கால்நடைகள் நஞ்சுத் தன்மையுடைய செடிகளையோ, பூச்சி மருந்துகளை எதிரபாரமல் உட்கொள்வதாள்லோ, பூச்சி கொல்லி மருந்து டப்பாக்களை நாக்கினால் நக்குவதாலும் மற்றும் பூச்சி மருந்து தெளித்த பயிரை உட்கொள்வதாள்லோ உடம்பில் நஞ்சுத் தன்மை ஏற்படலாம்। அச்சமயம் வயிறு உப்புசம், வாயிலிருந்து எச்சில் மற்றும் நுரைவடிதல், மூச்சுவிட சிரம்ப்படுதல், வலிப்பு, நினைவிழப்பு ஏற்பட்டு இறப்பு நீகழ வாய்ப்புண்டு.
முதலில் நல்ல காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். நஞ்சு வயிற்றில் தங்காமல் இருக்க சோப்புக் கரைசல் அல்லது உப்புக் கரைசலை வாயின் வழியாக கொடுக்கலாம். அடுப்புக் கரியை பொடி செய்து தண்ணீரில் கலந்து வாயில் ஊற்றலாம்.
வெறிநாய் கடி
எல்லா வெப்ப ரத்த விலங்குகளுக்கும் இந்நோய் வரும். இவ்வியாதியுள்ள ஒரு விலங்கின் உமிழ் நீரில் கருமி வெளியேறுகிறது. வியாதியுள்ள விலங்கு கடித்தாலோ அல்லது ஒன்றாய் உள்ள விலங்கின் உடம்பில் ஏதேனும் புண்ணிருந்து அதை நக்கினாலோ இக்கிருமி உடம்புக்குள் புகுந்துவிடும். அந்த சதைபகுதியிலேயே இனப்பெருக்கம் செய்து நரம்பு வழியாக தண்டுவடம் மற்றும் மூளையை அடைகிறது. 10 நாள் முதல் 7 மாதத்திற்குள் நரம்பு நோய் வந்து மரணம் அடையும்.
இதன் அறிகுறிகள் கண்டவரை எல்லாம் கடிக்க வரும், கண்ணில் பட்டதையெல்லாம் தின்ன முற்படும், கீழ்தாடை தொங்கும். உமிழ் நீர் நூலாய் வழியும். சில நாட்கள் கழித்து உறுப்புகள் செயலிழந்து அமைதியாகிவிடும். இவ்வியாதியுள்ள விலங்கினை தனியே அடைத்துவிடவும். கையுரை அணியாமல் விலங்கினை தொடக்குடாது. கடிபட்ட இடத்தை சுத்தமான நீர் மற்றும் சோப்பால் கழுவி விட்டு உடனே மருத்துவரை அணுகவும். வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் போடப்படும்.
பாம்பு கடி
பாம்பு கடி என்றால் ரத்தப் போக்கை கொஞ்ச நேரம் தடுக்காமல் விட்டுவிடலாம். காயத்தை சுத்தப்படுத்தி கட்டுப்போட வோண்டும். பாம்பு கடி என்பதன் அறிகுறிகள் நிற்க முடியாமல் கீழே விழுதல், எழவும் முடியாது. வாந்தி, . உமிழ் நீர் வழியும், மூச்சுவிட சிரம்ப்படும். சிறுநீரில் இரத்தம், காயத்திலிருந்து தொடர்ச்சியாக இரத்தம் வெளியேறிக் கொண்டே இருக்கும். உடனே மருத்துவரை அணுகவும்.
தொண்டை அடைப்பு
மாடு அல்லது ஆட்டின் தொண்டையில் ஏதாவது அடைத்துவிட்டால் கையை அல்லது விரலை விட்டு எடுத்துவிடலாம். அவசியப்பட்டால் கைக்குட்டையால் நாக்கை கிழே அழுத்திக் கொண்டு வாயிக்குள் இடுக்கி கொண்டு அடைப்பை எடுத்துவிடலாம். உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் வயிறு உப்புசம் ஏற்படலாம். கவனிக்காவிட்டால் மாடுகள் 4 அல்லது 5 மணி நேரத்தில் இறந்துவிடும்.
கருப்பை வெளித்தள்ளுதல்.
சில மாடுகளுக்கு சினைப் பருவத்தின் கடைசி மாதத்திலோ அல்லது கன்று ஈன்ற பின்போ கருப்பை வெளியே வாய்ப்புண்டு। இதனைத் தடுக்க ஒரே சமயத்தில் அதிக தீவனம் அல்லது தண்ணீர் கொடுக்க கூடாது. மாடுகள் படுத்திருக்கும் பொழுது பின் புறம் சற்று உயரமாகவும், முன் புறம் சற்று பள்ளமாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். கருப்பை வெளியே தள்ளப்பட்டால் மண் மற்றும் தூசுகள் படாமல் இருக்கவும், உலர்ந்துவிடாமல் இருக்கவும் சுத்தமான ஈரத்துணியை போர்த்தி வைக்கலாம். உடனே மருத்துவரை அணுகவும்.
முதலுதவி பெட்டி
விபத்துகள், நோய்கள் என்பவை முன் அறிவிப்பின்றி வருவது। எனவே அவசர உதவிக்காக முதலுதவி பெட்டி ஒவ்வொரு கால்நடை பராமரிபாளர் வீட்டிலும் இருக்க வேண்டும். அதில் இருக்க வேண்டிய மருந்துகள் பின்வருமாறு,
· கட்டுத் துணி, கயிறு, பஞ்சு, ஒட்டுப் பட்டை(பிளஸ்திரி)
· டெட்டால் அல்லது சாவ்லான், கத்தரி கோல்
· டிங்க்சர் அயோடின், பீட்டாடுன் கலவை, டிங்க்சர் பென்சாயின்
· கையுறை, வெள்ளை துணி,
· பாராசிட்டாமால், அவில், பெரிநார்ம், அனால்ஜீன் மாத்திரைகள் அல்லது ஊசிகள்.
· திசு காகிதம், வெப்ப மானி, டார்ச் லைட், பேனா, வெள்ளை தாள், சங்கிலி போன்றவை
முதலுதவி மட்டும் செய்து முழுசிகிச்சை செய்யாவிட்டால் கால்நடைகள் இறக்க நேரிடலாம். எனவே அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை அளிப்பது அவசியம்.
ஆதாரம் : கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்
கேள்வி பதில்கள்
1. மாடு பசும்புல் சாப்பிட்டால் கழிச்சல் ஏற்படுகிறது. இதனை தடுக்க என்ன செய்யலாம்?
ஏற்கனவே குடல் புழு நீக்கம் செய்திருந்தால் சானத்தை எடுத்து மருத்துவரிடம் காண்பியுங்கள். இல்லை என்றால் குடல்புழு நீக்கத்துக்கான மருத்துவத்தை மேற்கொள்ளுங்கள்.
2. கறவை மாட்டுக்கு மடிவீக்கம் இருக்கிறது? இதற்கு என்ன மருத்துவம் செய்யலாம்? எப்படி தவிர்ப்பது?
மாட்டை ஈரத்தில் கட்ட வேண்டாம். கட்டுத்தரையை சுத்தமாக வைத்திருங்கள். பால் கறக்கும் முன்பும், பின்பும் மடியை சுத்தம் செய்யுங்கள். மடி வீக்கம் இருக்கும் போது மஞ்சள், வேப்பம் கொழுந்து, கல் உப்பு மூன்றையும் அரைத்து தடவி விடுங்கள்.
3. மாட்டுக்கு வயிறு பூசலாக இருக்கிறது. மூன்று நாளாக மூச்சு வாங்கிறது. என்ன செய்யலாம்?
டிம்பால் என்ற மருந்து இருக்கிறது. தினமும் காலையில் 50 கிராம் என்ற விகிதத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு கொடுங்கள்.
4. பசு குறைமாதத்திலேயே கன்று ஈன்று விடுகிறது. பாலும் குறைவாகவே இருக்கிறது. இதனைத்தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
பக்கத்தில் இருக்கும் மாடுகளுக்கு ஏதாவது வியாதிகள் இருக்கின்றன என்று பார்க்க வேண்டும். அபார்ஷன் இருக்கிறதா என்று பார்ப்பதும் நல்லது. பக்கத்தில் உள்ள மாடுகள் முட்டி இருந்தால் இருந்தால் கூட பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கால்நடை மருந்துக்கடைகளில் கால்சிமாஸ்தி என்று திரவ மருந்து இருக்கிறது. அது 5 லிட்டர் அல்லது ஒரு லிட்டர் என அளவில் விற்கிறார்கள். அதனை வாங்கி தினமும் 100 மில்லி கொடுக்கவும். படிப்படியாக பால் உயரும். அடுத்த தடவை சினை ஊசி போடும் போது கற்பப்பையை கழுவி ஊசி போட சொல்லுங்கள்.
கேள்வி பதில்கள்
கேள்வி: பால் மாட்டிற்கு காம்பில் கொப்பளம் அதிகமாக இருக்கிறது?
பதில்: காம்பில் கொப்பளம் உள்ளது. "மாட்டு அம்மை” (cow pox) என்று உறுதி செய்து கொள்ளவும். அப்படி இல்லையெனில் பால் கறந்து முடிந்த பின்பு போரிக் ஆஸிட் பவுடருடன் தேங்காய் எண்ணெய் கலந்து தொடர்ந்து தடவி வரவும். கொழுந்து வேப்பிலை, மஞ்சள், கல் உப்பு இம்மூன்றைம் அரைத்து காம்பில் தடவலாம். மேலும் பால் கறப்பதற்கு முன்பு நன்றாக காம்பினை கழுவிய பின் பால் கறக்கவும்
கேள்வி: பசு மாட்டுக்கும், ஆட்டுக்கும் மழைக்காலத்தில் நோய் வந்தால் என்ன மாதிரியான கை வைத்திய முறையை கையாளலாம்?
பதில்: மழைக்காலத்தில் கழிச்சல், வாய் கோனாய், கால் கோமாரி, வாய் கோமாரி வந்தால் பூவன்பழம் 3-4 பழத்தை விளக்னெண்ணெய் அல்லது தோங்காய் பூ வை வெல்லம் கலந்து வாயில் கொடுத்து விடலாம். காலில் குளம்பில் புண் இருந்தால் வேப்பண் கொழுந்து, கல் உப்பு, மஞ்சளை சேர்த்து அரைத்து, மாட்டின் காலை நான்கு கழுவி தேய்த்து விட வேண்டும்.மழைக்காலத்திற்கு முன்பாகவே, உரிய தடுப்பூசி போடுவது நல்லது. நோய் வந்த பின்பு, எக்காரணத்தைக் கொண்டு தடுப்பூசி போடுவதை தவிர்க்கவும்.
கேள்வி ஆறு மாத கன்று குட்டிக்கு அடிக்கடி நடுக்கம் ஏற்படுகிறது? எப்படி நடுக்கத்தை நிறுத்துவது?
பதில்: பாண்டிகைண்ட் என்ற மருந்து இருந்து இருக்கிறது. ஒரு மருந்தை வாங்கி அதில் பாதியை ஒரு நாளைக்கு ஒரு தடவை கொடுத்து விடுங்கள். மீதி இருப்பதை பதினைந்து நாளுக்கு பின்னர் கொடுக்கவும். தீவனம் நல்ல கொடுங்கள். ஒரு மாதத்துக்கு ஒரு முறை கொடுங்கள்.


தென்னையில் அதிக விளைச்சல் பெறும் வழிமுறைகள்


தென்னையில் அதிக விளைச்சல் பெறும் வழிமுறைகள்
தேங்காயின் விலை முந்தைய காலகட்டத்தை விட அதிகமாக இருக்கிறது. அதிக
விளைச்சல் இருக்கும் நிலையில் குறைந்த விலையில் தேங்காய்கள் கிடைக்கும்
படி செய்யலாம். பணப்பயிர்களில் அமுதசுரபி போல் திகழும் தேங்காய்களை அதிக விளைச்சல் மூலம் பெற்றிட விவசாயிகள் சரியான உரநிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கு இயற்கை உரங்களான தொழுஉரம், வேப்பம் புண்ணாக்கு மற்றும் இலுப்பை புண்ணாக்கு போன்றவற்றுடன் கலந்து ஆண்டுக்கு ஓரிரு முறைகள் இடுவதன் மூலம் அதிகமான விளைச்சலை உறுதி செய்யலாம்.
ரசாயன உரங்களில் பலவகை சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒரு சில சத்துக்களே தென்னையில் வளர்ச்சிக்கு அவசியமாக இருக்கின்றன. இதில்
மணிச்சத்து முக்கியமானது. பலவாறாக இருக்கும் ரசாயன உரங்களில் மணிச்சத்து அடங்கியிருந்தாலும், சூப்பர் பாஸ்பேட் உரத்தில் அடங்கியிருக்கும்
மணிச்சத்தானது நிலத்திற்கு எந்த வித கெடுதலையும் செய்யாமல் தென்னைக்கு
ஊட்டமளிக்கிறது. சூப்பர் பாஸ்பேட்டில் மணிச்சத்துடன் தென்னை
வளர்ச்சிக்கும், நல்ல காய்பிடிப்பிற்கும் அவசியமான கந்தகம், சுண்ணாம்பு,
போரான், குளோரின் மற்றும் சோடியம் சத்துக்களும் வேறு பல நுண்ணூட்ட
சத்துக்களும் அடங்கியுள்ளன.
இந்த சத்துக்களில் உள்ள சத்துக்கள் தென்னையின் வளர்ச்சியில் என்ன
செய்கின்றன என்று பார்க்கலாம்.
மணிச்சத்து 16 சதவீதம்
இந்த சத்தானது, தென்னை நாற்றிலிருந்து முளைத்து வரும் குருத்தின் பருமனை
அதிகரிக்கவும், குருத்திலிருந்து அதிக இலைகள் உற்பத்தியாவதற்கும்
உதவுகிறது. மேலும் தென்னையில் அதிகமான வேர்கள் உருவாகவும், வேர்கள் ஆழமாக நிலத்தில் சென்று பிடிப்பை ஏற்படுத்தவும் உதவுகிறது. இதனால் மரத்தின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.
பாளையில் ஏராளமான பூக்கள் உருவாகவும், அவ்வாறு பூத்த பூக்கள் அனைத்தும்
தரம் மிக்க காய்களாக மாறுவதற்கும் உதவி செய்கிறது.
தேங்காய் குறுகிய காலத்தில் முற்றவும், கொப்பரையின் பருமனை அதிகரிக்கவும்
உதவுகிறது.
கந்தகச்சத்து 11 சதவீதம்
கந்தக சத்தானது தேங்காய் பருப்பு ரப்பர் போன்று ஆகிவிடாமல் கெட்டியாக
உருவாக உதவுகிறது.
கொப்பரையில் எண்ணெயின் அளவு கணிசமாக அதிகரிக்க உதவுகிறது. சூப்பர்
பாஸ்பேட் இடப்படாத தென்னையில் கந்தகச்சத்து குறைபாட்டினால் கொப்பரையில் எண்ணெய்ச்சத்து குறைந்து சர்க்கரை சத்து மட்டுமே அதிகமாக இருக்கும்.
சுண்ணாம்பு சத்து
சுண்ணாம்பு சத்தினால் மரம் வலிமையாக உருவாகும். மேலும் இந்த சத்தானது
மரத்தின் கட்டமைப்பில் உள்ள செல்களின் சுவர்களின் அமைப்பில், வேர்களின்
வளர்ச்சியில், சர்க்கரை மற்றும் தனிமங்களின் கடத்திலில் பெரும் பங்கு
வகிக்கிறது.
மேலும் நொதிப்பொருட்களின் வினையாக்கத்தை தூண்டி தென்னையின் சீரான
வளர்ச்சிக்கு அதிகரிக்கிறது. தென்னை பயிரிடப்படும் மணற்பாங்கான அமில வகை நிலங்களில் சுண்ணாம்பு சத்தானது தழை, மணிச்சத்து மற்றும் சாம்பல்
சத்துக்களை நல்ல முறையில் கிரகிக்க வழி செய்கிறது.
இது தவிர சூப்பர் பாஸ்பேட்டில் அடங்கியுள்ள தனிமச்சத்துக்களான போரான்,
குளோரின் மற்றும் சோடியம் போன்றவை தென்னை வளர்ச்சிக்கு அதிக
பங்களிக்கின்றன. இந்த சத்துக்களில் போரான் என்ற தனிமச்சத்து, இலைகள்
நன்றாக வெளிவரவும், ஓலைகள் திடமாக இருக்கவும், தேங்காய்கள் பருத்து
பருப்பின் அளவு அதிகரிக்கவும் உதவுகின்றது.
குளோரின் சத்தானது தழை, மணி, சாம்பல் மற்றும் மக்னீசிய சத்துக்களை தென்னை சீரான அளவில் எடுத்துக் கொள்வதற்கு உதவுகிறது.
இதில் உள்ள சோடியம் தென்னையின் தொடக்க கால வளர்ச்சியை தூண்டவும், வளர்ந்த தென்னையில் பெண்பூக்கள் அதிகமாக உற்பத்தியாவதற்கும், அவை மகரந்த சேர்க்கைக்கு பின் தரமான குரும்பைகளாக உருவாவதற்கும் உதவுகின்றது.
தென்னைக்கு உரமிடும் முறை
தென்னையை நட்ட முதலாம் ஆண்டில் யூரியா 500 கிராம், சூப்பர் பாஸ்பேட்
500கிராம், பொட்டாஷ் 825 கிராம், வேப்பம் புண்ணாக்கு 1250 கிராம்,
தொழுஉரம் 10 கிலோ என்ற அளவில் இடவேண்டும். இரண்டாவது ஆண்டில் யூரியா 1300 கிராம், சூப்பர் பாஸ்பேட்800 கிராம், பொட்டாஷ் 1625 கிராம், வேப்பம்
புண்ணாக்கு இரண்டரை கிலோ, தொழுஉரம் 2 கிலோ என்ற அளவிலும், மூன்றாம்
ஆண்டில் யூரியா 1600 கிராம், சூப்பர் பாஸ்பேட் 1200 கிராம், பொட்டாஷ்
இரண்டரை கிலோ, வேப்பம் புண்ணாக்கு 3 கிலோ 750 கிராம், தொழுஉரம்
3கிலோவும், நான்காம் ஆண்டில் யூரியா 2கிலோ, சூப்பர் பாஸ்பேட் 1 கிலோ 600
கிராம், பொட்டாஷ் 3கிலோ 300 கிராம், வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ மற்றும்
தொழுஉரம் 4 கிலோவும் இடவேண்டும்.
நான்கு ஆண்டுகளுக்கு மேற்பட்ட தென்னைக்கு யூரியா 2 கிலோவும், சூப்பர்
பாஸ்பேட் 1 கிலோ 600 கிராமும், பொட்டாஷ் 3 கிலோ 300 கிராம், வேப்பம்
புண்ணாக்கு 5 கிலோ மற்றும் தொழுஉரம் 5 கிலோவும் இட வேண்டும். குறிப்பாக
இந்த உரங்களை ஜுலை, ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பாதியையும், அக்டோபர் மாதத்தில் மறுபாதியையும் இடவேண்டும்.
இந்த அடிப்படையில் தென்னைக்கு உரங்களை இட்டு வந்தால் மரத்தின் விளைச்சல் தொடர்ந்து அதிகரிக்கும். விவசாயிகள் நல்ல லாபத்தை பெறலாம்.



Monday, April 23, 2018

கால்நடைகளுக்கு வெப்ப அயற்சிதவிர்க்க யோசனை

கால்நடைகளுக்கு வெப்ப அயற்சிதவிர்க்க யோசனை

தற்போது நிலவிவரும் கத்தரி வெயிலால் கால்நடை, கோழிகள் வெப்ப அயற்சியின் காரணமாக பாதிப்பிற்கு உள்ளாகும். கால்நடைகளின் உற்பத்தி திறன் குறைந்து, சில சமயம் இறப்பு நேரிடும். கால்நடைகள் தங்கள் உடலை வெப்பநிலைக்கு ஏற்ப சீராக வைத்துக்கொள்கின்றன. ஆனால் குறிப்பிட்ட வெப்பத்திற்கு மேல் வெப்ப அயற்சி ஏற்படுகிறது. இக்காலகட்டத்தில் சுவாசம் அதிகரித்தும், மூச்சு வாங்குதல் காணப்படும். தண்ணீர் உட்கொள்ளும் அளவு அதிகரிக்கும். நிழலான இடத்தை நோக்கி தள்ளாடியபடி நடக்கும்.
சில சமயம் முறையாக பராமரிக்காவிடில் இறப்பு நேரிடும். கோடையில் கால்நடைகளை சூரிய ஒளியின் நேரடி தாக்குதலில் இருந்து பாதுகாக்க, வெயிலில் மேய்ச்சலை தவிர்த்து நல்ல காற்றோட்டமான கொட்டகையினுள் அல்லது மரநிழலில் இருக்கவேண்டும். கொட்டகையினுள் அதிக நெரிசலின்றி ஒரு மாட்டுக்கு 4 சதுர மீட்டர் பரப்பளவு இடம் கிடைக்க வேண்டும். கொட்டகை மேற்கூரை வழியே வெப்பம் தாக்காமல் இருக்க வேளாண் கழிவுகளை கூரையின் வெளிப்பகுதியில் பரப்பி நீர்தெளிக்கலாம்.
கொட்டகையை சுற்றி வேம்பு, புங்கன் போன்ற மரங்கள் இருப்பது நல்லது. கொட்டகையின் நீளவாக்கு கிழக்கு மேற்காக அமைப்பதன் மூலம் சூரிய ஒளி நேரடியாக உள்ளே வராது. கொட்டகை கூரை உச்சி 12-14 அடி உயரம் இருந்தால் நல்ல காற்றோட்டம் ஏற்படும். கொட்டகையினுள் சாணம் மற்றும் கழிவுகளை முறையாக சுத்தம் செய்வதன் மூலம் தொற்றுநோய் தாக்குதல் இருக்காது.
அதிக வெப்பம் சுற்றுப்புறத்தில் காணப்படுவதால் கால்நடைகளின் உடல் வெப்பநிலையும் அதிகரித்து வெப்ப அயற்சி அல்லது வெப்ப தாக்குதலுக்கு உள்ளாகின்றன. ஆகையால் கால்நடைகளின் உடல் வெப்பநிலையை தணிப்பது மிக அவசியம். இதற்கு ஒரு நாளைக்கு 5 முறை பூவாளியில் தண்ணீர் எடுத்து பசுக்களின் உடல் மீது தெளிக்கலாம். கொட்டகையினுள் நல்ல காற்றோட்டத்தை உருவாக்கவும், உடல் சூட்டை தணிக்க மின்விசிறி பயன்படுத்துவதின் மூலம் கால்நடைகளின் உற்பத்தி திறன் குறையாமல் பராமரிக்கலாம்.
குடிநீரின் அவசியம்
கால்நடைகளுக்கு துாய்மையான குளிர்ந்த நீரானது தேவையான அளவு 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் வைக்கவேண்டும். வெயில் காலத்தில் குடிநீரின் தேவை இருமடங்காக உயர்வதால் போதிய அளவு குடிநீர் கிடைக்கும் வகையில் மேய்ச்சல் நிலங்களிலும் குடிநீர் தொட்டிகளை நிழலில் அமைப்பது அவசியம்.
ஒரு கறவை மாட்டிற்கு ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 70 – 80 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். உடல் வெப்பத்தால் தீவனம் உட்கொள்ளும் அளவு குறைவதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு உற்பத்தி திறன் குறையும். கறவை மாடுகளுக்கு சினை பிடிக்கும் தன்மை குறையும். இதனால் அடர் தீவனத்தில் தானவாஸ் தாது உப்பு கலவையை 2 சதவீத அளவில் கலந்து பயன்படுத்தவும் அல்லது பசுவிற்கு ஒரு நாளுக்கு 40 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து அளிக்கவும். சரி விகித தீவனம் அளிப்பது மிக அவசியம். அதிக வெயிலினால் மேய்ச்சல் நேரம் குறைந்து மாலை மற்றும் இரவில் பசுந்தீவனம் மற்றும் மரத்தழைகளை அளிக்கலாம்.
அசோலா தீவனம்
அசோலா பாசியை தீவனமாக அளிப்பதன் மூலம் புரதச்சத்து தேவையை ஈடுசெய்யலாம். ஒரு நாளைக்கு 1 பசுவிற்கு 1.5 கிலோ அளவில் அளிக்கலாம். அசோலா தொட்டிகளை நேரடி சூரிய ஒளியில்படுமாறு அமைத்தால் அதிகளவில் நீர் ஆவியாகி தேவையான அளவு அசோலாவாக உற்பத்தி செய்ய இயலாது.
ஆகையால் நிழலான பகுதியில் அசோலா குடிலை அமைத்து தினமும் அசோலாவை கால்நடைக்கு அளிக்க வேண்டும்.
ஹைட்ரோபோனிக் தீவனம்
பசுந்தீவன குறைபாட்டைஈடு செய்ய மண் இன்றி, தட்டுகளில் தானியங்களை முளைகட்டி தேவையான தண்ணீர் தெளித்து வளர்க்கப்படும் ஹைட்ரோபோனிக் தீவனங்களை கால்நடைகளுக்கு அளிக்கலாம். இதனை உற்பத்தி செய்ய குறைவான தண்ணீரும், குறைந்த இடவசதியும் போதுமானது. அதிக நீர்ச்சத்தும் குறைவான நார்சத்தும் கால்நடைகளுக்கு கிடைக்கின்றன. மக்காச்சோளம், சோளம், கம்பு போன்ற தானியங்களை தண்ணீரில் ஊறவைத்து முளைக்கட்டி 4 – 8 நாட்கள் வளர்ந்த பின் கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
டாக்டர்கள் ஆலோசனை
அதிக வெப்ப அயற்சியின் காரணமாக கால்நடைகளின் நோய் எதிர்ப்பு திறன் குறைகிறது. தேவையான அளவு தீவனம் உட்கொள்ளாத போது ஊட்டச்சத்து குறைபாட்டால் நோய் தாக்குதல் ஏற்படலாம். கால்நடை டாக்டர்களின் ஆலோசனை பெற்று கால்நடைகளை பாதுகாக்கலாம்.

கால்நடைகளுக்கு மருந்தாகும் சோற்றுக் கற்றாழை

கால்நடைகளுக்கு மருந்தாகும் சோற்றுக் கற்றாழை

சோற்றுக்கற்றாழை ஆப்ரிக்கா கண்டத்தினை தாயகமாக கொண்டது. எகிப்திய மக்கள் பழங்காலத்தில் இந்த அரிய மூலிகையை தீக்காயம், நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு மருந்தாக பயன்படுத்தினர். கற்றாழை வெப்ப மண்டல செடியாகும். ஒவ்வொரு செடியிலும் 16 மடல்கள் வரை இருக்கும். வேரோடு பிடுங்கி அந்தரத்தில் கட்டி தொங்கவிட்டாலும் ஏழு ஆண்டு வரை உயிர் வாழக்கூடிய அரிய வகை மூலிகை.
வைட்டமின் ஏராளம்
விலங்கினங்களுக்கு தேவையான 20 தாதுக்கள் கற்றாழையில் இருக்கிறது. வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி’ மற்றும் ‘இ’ பொதிந்து கிடக்கிறது. கற்றாழை இலையின் உட்புறத்தில் உள்ள ஜெல் அற்புதமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. அழகு சாதனப் பொருட்களில் கற்றாழை ஜெல் மிக அதிகளவு உபயோகமாகிறது.
கால்நடை வளர்ப்பிலும், சில நோய்களை குணப்படுத்த சோற்றுக் கற்றாழையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கறவை மாடுகளில் ஏற்படும் மடிநோய், கோழிகளில் ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோய் மற்றும் ரத்தக் கழிச்சல் நோய் போன்றவற்றில் கற்றாழை மிக பயனாகிறது.
கால்நடைகளின் மருந்து
கறவை மாடுகளில் மடி வீக்கம் ஏற்பட்டு பால் சுரப்பு குறைய ஆரம்பிக்கும். இதனால் மடியில் ஏற்படும் வீக்கம் சோற்றுக் கற்றாழையால் குறையும். சோற்றுக் கற்றாழையின் ஜெல் உடன் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு சேர்த்து மடியில் தடவும் பொழுது,வீக்கம் குறைய வாய்ப்புகள் உள்ளது.
இதற்காக சோற்றுக் கற்றாழையின் சோறு எனப்படும் ஜெல்லை பெற ஒரு பெரிய மடல் அல்லது இரண்டு சிறிய மடல்களை எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் மஞ்சள் 50 கிராம், சுண்ணாம்பு 5 கிராம் சேர்த்து மிக்சியில் 150 மில்லி தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். இப்பசையை பாதிக்கப்பட்ட மடியில் தடவ வேண்டும்.
அதற்கு முன்னால் பாதிக்கப்பட்ட காம்புகளிலிருந்து பாலை முழுவதுமாக கறப்பது முக்கியமானதாகும். சோற்றுக் கற்றாழைக் கலவையை ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை மடியில் தடவினால் நல்லது. இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு செய்தால் பலன் கிடைக்கும். ஒரு நாளுக்கு தேவையான கலவையை மொத்தமாக சேர்த்து அரைத்து வைத்து கொள்ளக்கூடாது.
கற்றாழை குப்பை மேனி
ஒவ்வொரு முறையையும் கலவையை புதிதாக தயார் செய்வதே நல்லது. கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் ஏற்படும் பொழுது அதனால் உண்டாகும் இறப்பை கட்டுப்படுத்த சோற்றுக் கற்றாழை, மஞ்சள், சிறிதளவு புளியம்பழம் சேர்த்து அரைத்து அரிசி குருணையுடன் கலந்து கொடுக்கலாம்.
ரத்தக் கழிச்சல் நோய்க்கு சோற்றுக் கற்றாழை மடல் ஒன்று, காப்புக்கட்டு செடி ஒரு கையளவு, இலந்தை மரத்தின் இலை ஒரு கையளவு, நாவல் மரத்தின் கொழுந்து இலை ஒரு கையளவு சேர்த்து அரைத்து தயிரில் கலந்து தர வேண்டும்.
இதை ஒரு நாளைக்கு இரண்டு வேளை கொடுக்கலாம். கால்நடைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் அசையும் இரைப்பையில் உண்டாகும் இறுக்கம் ஆகியவற்றுக்கும் சோற்று கற்றாழையை கொடுக்கலாம்.
ஒரு கற்றாழை மடலின் கூழோடு, இரண்டு கையளவு குப்பை மேனி இலையையும் சேர்த்து அரைத்து கொடுத்தால் நோய் குணமாகும். மேலும் தோல் நோய்கள், குடற்ப்புழு நீக்கத்திலும், உண்ணி, பேன் நீக்கம் போன்ற மருத்துவத்திலும் சோற்றுக் கற்றாழை கால்நடைகளுக்கு மருந்தாக உதவுகிறது.

உயரம் இரண்டே அடி…4 லிட்டர் பால்…

உயரம் இரண்டே அடி…4 லிட்டர் பால்… 

முன்பெல்லாம் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் எல்லாம் நாட்டு ரக மாடுகளாகவே இருக்கும். காங்கேயம், பர்கூர், பெரம்பலூர், மணப்பாறை, புங்கனூர் குட்டை, கிர், சாஹிவால் எனப் பல்வேறு இனங்கள் அதில் அடக்கம். இன்றைக்கு நாம் காணும் மாடுகளில் பெரும்பாலானவை நாட்டு மாடுகளே அல்ல. ஜெர்ஸி, ஹோல்ஸ்டைன், ப்ரீசியன், ரெட்டேன் போன்ற கலப்பின ரகங்கள் அதிகரித்துவிட்டன. இதன் விளைவாக நாட்டு மாடுகள் அழிவின் விளிம்பில் உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்த நாட்டு மாடுகளாக இருந்தாலும் நாட்டு மாட்டு ஆர்வலர்கள் அவற்றைப் பாதுகாத்துவருகின்றனர்.
அதிகம் அறியப்படாத நாட்டு மாட்டு இனங்களில் முக்கியமானது வெச்சூர் இன மாடு. இவ்வின மாடுகள் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவில்தான் இருக்கின்றன.
கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டத்தில் உள்ள வெச்சூர் என்ற ஊரின் பெயரினால் இம்மாடுகள் அழைக்கப்படுகின்றன. வெச்சூர் மாடுகள் இரண்டடி முதல் இரண்டரை அடி மட்டுமே உயரம் கொண்டவை.
வெச்சூர் மாடு உலகின் சிறிய மாடாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது, இதன் தனிச் சிறப்பு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் இம்மாடுகளை எளிதில் கையாளலாம். வெச்சூர் மாடுகள் பற்றிய ஆர்வம் காரணமாக, விலங்கு வளர்ப்பு பேராசிரியரான சோசம்மா லைப் மற்றும் அவரது மாணவர்கள் கொண்ட குழு இணைந்து செய்த பணியின் காரணமாக இந்த மாடுகள் அழிவிலிருந்து காக்கப்பட்டன. இவர்களால் 1989-ம் ஆண்டில், நாட்டு மாட்டு பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டது.
1998-ல் பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பு விவசாயிகளின் உதவியுடன் அமைக்கப்பட்டது. 1960-ம் வரை வெச்சூர் மாடுகள் கேரளத்தில் உச்சகட்ட வியாபாரமாக இருந்தன. ஆனால், இந்த மாடுகள் கலப்பினத்துக்கு உட்பட்டதால் அரிய வகைப் பட்டியலில் இணையும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இதன் விளைவு 2000-ம் ஆண்டில், வெச்சூர் மாடு உள்நாட்டு விலங்குகளுக்கான FAO-ன் உலக கண்காணிப்புப் பட்டியலில், உடனடியாக அழியக்கூடிய விலங்கு பட்டியலில் இடம் பெற்றது. ஒரு விலங்கு இனத்தில் ஆண், பெண் விலங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறையும்போது இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுவது வழக்கம். இந்த மாடுகள் சுமார் 200 மாடுகள் இருக்கலாம் என அப்போது கருதப்பட்டது. இவற்றில் கிட்டத்தட்ட 100 மாடுகள் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இருந்ததாகக் கணக்கிடப்பட்டது. இந்த மாடுகளின் சராசரி எடை 130 கிலோ. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக மூன்று லிட்டர் பால் கறக்கக் கூடியது.
திருப்பூர் மாவட்டம், முத்தூர் பேரூராட்சி, மேட்டுக்கடை கிராமத்தில் வச்சூர் மாடு வளர்த்து வரும் நந்தகுமார் பேசும்போது, “மாடு இரண்டரை அடிதான் இருக்கிறது. ஒரு நாளுக்கு இரண்டு முதல் இரண்டரை லிட்டர்வரை பால் கிடைக்கிறது. இதற்குக் குறைந்த அளவு உணவு கொடுத்தால் போதும். ஆனால், அதிக பால் கொடுக்கக் கூடியது. இதன் பால் அதிக சத்தும் கூட. இதன் பாலை விற்பனை செய்வதில்லை, நாங்களே சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறோம். இதன் எருவினை தனியாக சேகரித்து மரங்களுக்கும் பயன்படுத்துகிறோம். மிகவும் சாதுவான குணம் படைத்தது. பார்ப்பதற்குச் சிறு கன்றைப் போலவே இருக்கும். சிலர் இது கன்றுதான் என நினைத்து எளிதில் கடந்து செல்வர். நாட்டு மாடுகளைப் பற்றி தெரிந்த சிலர் எளிதில் அடையாளம் காண முடியும். இதற்கு உணவாகப் பசும்புல், இலை, தழைகளைக் கொடுத்தாலே போதுமானது. எங்களிடம் இருக்கும் வச்சூர் மாடு 8 கன்றுகளை பிரசிவித்திருக்கிறது” என்றார்.

வாழை சாகுபடிக்கு நிலத்தை எப்படி தயார்ப்படுத்துவது?

வாழை சாகுபடிக்கு நிலத்தை எப்படி தயார்ப்படுத்துவது?


மண் வகைகள்
வாழையின் நல்ல வளர்ச்சிக்கும், நல்ல மகசூலுக்கும் ஆழமான நல்ல வடிகால் தன்மை கொண்ட, நீர்ம பிடிப்புக் கொண்ட அதிக அளவில் கரிமப் பொருட்களுடைய வண்டல் மண், கார அமிலத்தன்மை (PH 6 – 8) மண்வகைகள் மிகவும் நல்லது.
நிலத்தை எப்படி தயார்ப்படுத்துவது?
1.. நிலத்தை 3-4 முறை நன்றாக உழவு செய்தபின் எக்டேருக்கு 10-15 டன்கள் நன்கு மக்கிய தொழு உரத்தை நிலம் முழுவதும் இட்டு பின்பு மீண்டும் ஒருமுறை உழ வேண்டும்.
2.. நிலமானது உவராக இருந்தால் பசுந்தாள் உரப் பயிரான தக்கைப் பூண்டு, சணப்பு ஆகியவற்றை வளர்த்து பூப்பதற்கு முன் அப்படியே நிலத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.
3.. செம்பொறை மண் இருக்கும் இடங்களில் வேர் வளர்ச்சி தடைபடும் என்பதால் 2 அடி அகலமும் 2 அடி ஆழமும் உள்ள குழியில் மக்கிய தொழு உரம், ஜிப்சம், நெல் உமிச் சாம்பல் ஆகியவை இட்டு நிரப்பி வாழை நடவு செய்ய வேண்டும்.
4.. தோட்டக்கால் நிலங்களில் 2 x 2 x 2 அடி உயரம் ஆழம், அகலமுள்ள குழிகளில் கார்போபியூரான் 30 கிராம டிஏபி 10 கிராம, புண்ணாக்கு 500 கிராம், மக்கிய தொழு உரம் 5 கிலோ ஆகியவற்றை இட்டு நிலட்தை தயார் செய்யலாம். பின் வாழை நடவு செய்யலாம்.


மாதுளை சாகுபடியில் தினசரி வருமானம் 2,500 ரூபாய்!

மாதுளை சாகுபடியில் தினசரி வருமானம் 2,500 ரூபாய்!




தர்மபுரி மாவட்டம், வறட்சியான மாவட்டங்களுள் இதுவும் ஒன்று. ஆனால்  அந்த மாவட்டத்திலும் தற்போது பரவலாக விவசாயம் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. அதுவும் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளும் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சோமனஅள்ளி கிராமத்திற்கு சென்றிருந்தபோது இங்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கிடைக்கும் என விளம்பரப்பலகை வைக்கப்பட்டு இருந்தது. பண்ணைக்கு உள்ளே சென்று இயற்கை விவசாயி நீலகண்டனை சந்தித்தோம். மாதுளை பறித்துக் கொண்டிருந்தவர் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் முகமலர்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்.
“எனக்கு சொந்த ஊர் இந்த சோமனவள்ளி கிராமம்தான். விவசாயம் செய்து பொருட்களை மக்களுக்கு குறைவான விலையில்தான் விற்பனை செய்கிறோம். மக்களுடைய ஆரோக்கியத்திற்கு பயனுள்ள வகையில் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இயற்கை முறையில் மாதுளை சாகுபடி செய்ய முடிவு செய்தேன். பகுவா ரக ஒரு மாத வளர்ப்பு செடிகளை, ஒரு செடி 35 ரூபாய்க்கு விலைக்கு வாங்கினோம். இரண்டு ஏக்கர் நிலத்தில், மொத்தமாக 750 செடிகளை நடவு செய்தேன். எனது உறவினர் ஒருவர் திருச்செங்கோட்டில் இயற்கை முறையில் மாதுளை தோட்டத்தை அமைத்து நல்ல முறையில் லாபம் ஈட்டி வருகிறார். அவரை பார்த்து தான் எனக்கு அதே போல மாதுளை தோட்டம் அமைக்க வேண்டும் என்ற ஆவல் வந்தது என்றவர், நடவு முறைகளை பற்றி பகிர்ந்து கொண்டார்.
“செடிகளை நடுவதற்கு முன்பு இரண்டுக்கு இரண்டு அடி என்ற அளவில் குழி எடுக்கவேண்டும். ஒவ்வொரு செடிக்கும் 10 அடி இடைவெளியில் செடி நடவு செய்து அதன் பிறகு மாட்டு சாணம், வேப்பம் புண்ணாக்குடன் செடிகளை நட்டேன். 25 ஆயிரம் ரூபாய் தண்ணீர்க்குழாய்களை வாங்க செலவு செய்தேன். குழாய்களின் மூலம் செடிகளுக்கு இணைப்பு கொடுத்து சொட்டு நீர் பாசனம் அமைத்தேன். அதன்படி ஒரு நாளைக்கு 1/2 மணி நேர வீதம் ஒரு செடிக்கு 8 லிட்டர் தண்ணீர் பாய்ச்சினேன். முதலில் செடி காய்ப்பிற்கு வரும் வரை 1/2 மணி நேரமும் அதன் பிறகு செடி நன்கு வளர்ந்த பிறகு 1/4 மணி நேரமும் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. பஞ்ச காவ்யத்தை வாங்கி செடிகளுக்கு தெளித்தேன். பஞ்சகவ்யாவை நாமே தயாரித்தால் செலவினம் குறைவாக இருக்கும்.
ஒரு நாளைக்கு 1/4 மணி நேரம் மட்டும் நீர் பாய்ச்சினால் காய்ப்பு சரியாக வரவில்லை என்றால் அரை மணி நேரம் அல்லது முக்கால் மணிநேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். காய்ப்பு அதிகமாக இருந்தால், குறைவான தண்ணீரே போதுமானது. தண்ணீர் அதிகமாக பாய்ச்சினால் மரங்களில் அதிகமாக இலை பிடிக்கும், அதனால் அதிகமாக வரும் இலைகளையும், பக்க கிளைகளையும் கவாத்து செய்து விடுவேன்.
மாதுளையை பொறுத்த வரையிலும் பட்டம், காலநேரம் பார்க்கத் தேவையில்லை. இதனால் காய்ப்புக்கு வருவதில் சிக்கல் இருக்காது, எப்போதும் மகசூலை கொடுக்கக் கூடியது. 2015-ல் மாதுளை செடி வைத்தேன். மாதுளையில் ரெட் ரூபி, காபூல் என்று ரகம் பிரபலம். பகுவா ரக மாதுளையை காய்ப்புக்கு வரும் 15 வது மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் செடிகளை பராமரிக்க, களை எடுப்பது மற்றும் கவாத்து கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும். மாதுளைக்கு சொட்டு நீர் பாசனம்தான் சிறந்தது. மழை பெய்யும் காலங்களில் பத்து நாளைக்கு தண்ணீர் விட வேண்டிய தேவை இல்லை” என்றவர், வருமானம் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
“தோட்டம் முழுமையாக அமைக்க குறைந்தபட்சம் ஐந்துலட்சம் வரை செலவாகும். கால்நடைகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க தோட்டத்தை சுற்றிலும் வேலி அமைத்து இருக்கிறேன். கிளிகள், அணில், முயல் போன்றவை மட்டும் தோட்டத்திற்குள் வந்து விடுகின்றன. அவற்றின் எச்சங்கள் உரமாக அமைவதால் அதற்கு நாங்கள் எந்த தொந்தரவும் தருவதில்லை. தோட்டத்திற்கு நடுவே ஒரு சிறிய கண்காணிப்பு கோபுரம் அமைத்து இருக்கிறேன். அதில் ஏறி பார்த்தால் தோட்டத்தை எளிதாக கண்காணிக்கலாம். இரவு நேரங்களில் அந்த கோபுரத்திலே படுத்து கொள்வேன். எனது மனைவி கார்த்திகாவும் விவசாயத்தில் எனக்கு துணையாக இருக்கிறார். டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 15 வரை இரண்டு மாதங்களில் ஒரு நாளைக்கு நூறு கிலோ வரைகூட அறுவடை செய்யலாம். ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். நான் யாருக்கும் வெளியே கொண்டு போய் விற்பதில்லை. பழங்கள் தேவைப்படும் பொதுமக்களும் வியாபாரிகளும் தோட்டத்திற்கு நேரடியாக வந்து வாங்கி கொள்கிறார்கள். தினசரி வருமானமாக 20 முதல் 25 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. இதன் மூலம் கிலோ 100 ரூபாய் என வைத்துக்கொண்டால், தினமும் எனக்கு 2,500 ரூபாய் வருமானமாக கிடைக்கிறது. மாதுளைச்செடி பத்து முதல் 12 வருடங்களுக்கு மகசூல் தரும். நாம் செடிகளை பராமரிப்பதை பொறுத்துதான் விளைச்சலும் இருக்கும், அதனால் மாதுளையில் வருமானத்தை பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை” என்றபடி விடைகொடுத்தார்.


மூலிகை வளம் - குப்பைமேனி

மூலிகை வளம் - குப்பைமேனி


மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்துவிட்டனர்... கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே.... 'மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.
இந்த இதழில் வீதியெங்கும் விளைந்து கிடக்கும் குப்பைமேனி பற்றி அறிந்து கொள்வோம்...
'குப்பையில் கிடக்கும் கோமேதகம்’, 'சேற்றில் முளைத்த செந்தாமரை’ எனச் சொல்வார்களே... அதற்கு முற்றும் பொருத்தமானது, குப்பைமேனி. வாய்க்கால், வரப்பு, சாலையோரங்கள், குப்பைமேடுகள் எனக் காணும் இடங்களிலெல்லாம் துளிர்த்துக் கிடக்கும் குப்பைமேனி... மனிதனைக்  காக்கும் அற்புத மூலிகை என்பது, நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

குப்பையான மேனியைக் குணப்படுத்தும்!
'உணவே மருந்து... மருந்தே உணவு’ எனச் சொன்ன முன்னோர்களின் அறிவை, கை கொள்ளாததன் விளைவு, பல்வேறு பிணிகளால் பின்னப்பட்டுக் கிடக்கிறது, நம் உடம்பு. இப்படி, நோயால் குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால்தான் இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்திருக்குமோ... என ஆச்சரியப்படும் வகையில் இருக்கிறது, இதன் பயன்பாடு. குப்பைமேடுகளில் வளர்வதால்... இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
பூனைவணங்கி!
இதை, 'மார்ஜால மோகினி’ என வடமொழியில் அழைக்கிறார்கள். 'மார்ஜாலம்’ என்றால் பூனையைக் குறிக்கும்.

'பூனைவணங்கி’ என்ற பெயரும் இதற்கு உண்டு. 'குப்பைமேனியில் உள்ள கந்தகச்சத்து, பூனையின் கண்களுக்கு எரிச்சலைக் கொடுப்பதால், அதன் அருகில் வரும்போது பூனையானது கண்களை மூடிக் கொள்ளும். அதேசமயம், ஆரோக்கிய குறைவான உணவை உண்பதால் பூனைகளுக்கு ஏற்படுகிற நஞ்சினை நீக்குவதற்கான மருந்து, குப்பை மேனியில்தான் இருக்கிறது. எனவே, கந்தகத் தாக்குதல் குறைவாக இருக்கும் இரவு வேளைகளில் சென்று, குப்பைமேனி இலைகளை பூனைகள் உண்ணும். அதனால்தான் பூனைவணங்கி என்று பெயர் வந்தது' என்று இதற்கு விளக்கம் சொல்கிறார்கள்.
குப்பைமேனி சிறுசிறு கிளைகளுடன் உள்ள அடர்த்தியான செடி. இலையின் ஓரங்கள் ரம்பத்தின் பற்களைப் போன்று இருக்கும். பச்சை நிறத்தில் மிளகு போன்ற காய்கள் இதில் காய்க்கும். இது, விதை மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதன் இலைகளின் அமைப்பே வித்தியாசமானது. மாற்றடுக்கில் அமைந்துள்ளதால், உச்சிவெயில் நேரத்தில் ஓர் இலையின் நிழல், அடுத்த இலையின் மீது விழாது.
குடற்புழு நீக்க மருந்து!
குப்பைமேனி குணமாக்கும் நோய்களின் எண்ணிக்கை ஏராளம். இதன் இலை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன்பாடு நிறைந்தவை. குப்பைமேனி செடியை வேருடன் பிடுங்கி, அப்படியே நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கி உலர வைக்க வேண்டும். அதில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுக் காய்ச்சி, ஆற வைத்து வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால்... பேதியாகி மலத்துடன் வயிற்றுப் பூச்சிகள், கிருமிகள் வெளியேறிவிடும். இலையை பொடி செய்து சாப்பிட்டும் பூச்சிகளை வெளியேற்றலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான அற்புதத் தீர்வு, இதன் இலையும், வேரும். குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். இதற்கு ஆங்கில மருந்துக்கடையில் ஒரு குப்பியை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அதைவிட குப்பைமேனி இலையை அரைத்து சாறெடுத்து, குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி கொடுத்தாலே போதுமானது.

வயது வித்தியாசமின்றி பலரும் இன்று மூல நோயால் அவதிப்படுகிறார்கள். காரமான உணவு உண்பது; சரிவிகித உணவாக இல்லாமல் புரதம் நிறைந்திருக்கும் உணவை மட்டும் உண்பதால் ஏற்படும் மலச்சிக்கல் ஆகியவைதான் மூல நோய்க்கு முக்கியமான காரணங்கள். இந்நோய்க்கு எளிதான தீர்வு, குப்பைமேனி.
அறுவை சிகிச்சைக்கும் அசைந்து கொடுக்காத மூலத்தை, நிர்மூலமாக்கும் ஆற்றல் குப்பைமேனிக்கு இருக்கிறது. குப்பைமேனியை வேருடன் பிடுங்கி, நிழலில் உலர்த்தி சூரணம் செய்து, 5 கிராம் அளவு எடுத்து பசு நெய்யோடு சேர்த்து 48 நாட் களுக்கு காலை, மாலை என இருவேளைகளும் உண்டு வந்தால்... ஆசன மூலம், பக்க மூலம், சிந்தி மூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலை மூலம், கொடி மூலம், கண்டமாலை என எட்டு வகையான மூல நோய்களும் கட்டுப்படும்.  
தோல் நோய் குணமாகும்!
ஆஸ்துமா, சைனஸ்... போன்ற  நோய்களைக் குணமாக்கும் ஆற்றலும் குப்பைமேனி இலைக்கு உண்டு. இது, உடலில் வெப்பத்தை உண்டாக்கி, நாள்பட்ட கோழையைக்கூட வெளியேற்றி விடும். இலையை உலர்த்தி சூரணம் செய்து, சின்ன நெல்லிக்காய் அளவு தேனில் கலந்து கொடுத்து வந்தால்... இருமல், இரைப்பு, கபம் குணமடையும். சொறி, சிரங்கு போன்ற பல்வேறு தோல் நோய்களுக்கு, குப்பைமேனி தைலத்தை
15 நாட்கள் தொடர்ந்து தடவி வந்தால்... 'ஸ்கின் பிராப்ளமா... எனக்கா?’ எனக் கேட்கும் அளவுக்கு 'அடடா’ மாற்றத்தை உணர்வீர்கள். இப்படி, தலைவலி, வாத நோய், படுக்கைப் புண்கள்... என இது தீர்க்கும் நோய்கள் ஏராளம், ஏராளம். தான், குப்பையில் வளர்ந்தாலும் மனிதர்களின் நோய்களை அறுக்கும் குப்பைமேனி ஆராதிக்கப்பட வேண்டிய ஒன்று.

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள்

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள். =================================  February 7, 2019 (ப.ப) இன்றைக...

உழவர் சந்தை