Friday, July 13, 2018

செம்மறியாடு வளர்ப்பு

செம்மறியாடு வளர்ப்பு



செம்மறியாடுகள் எல்லா தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை கொண்டவை. அதிகளவு நிலம் கொண்டு பகுதிகளில் திறந்த வெளியில் மேயவிட்டும், இடவசதி குறைவாக உள்ள இடங்களில் பட்டியலில் அடைத்தும் ஆடுகளை வளர்க்கலாம். குறைந்த செலவில் சிறு, குறு நில விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஆடு வளர்ப்பு இலாபம் தரும் தொழிலாக விளங்குகிறது.
செம்மறி ஆடு வளர்ப்பின் நன்மைகள்
  • செம்மறி ஆட்டிலிருந்து இறைச்சி, கம்பளம், தோல் எரு மற்றும் பால் மூலம் வருவாய் கிடைக்கிறது.
  • ஒரு செம்மறி ஆடு ஒரு ஆண்டிற்று 500 முதல் 700 கிலோ எரு உற்பத்தி செய்கிறது.
  • செம்மறி ஆடுகள் புல்லின் மேற்பகுதி மட்டும் மேய்வதால் மேய்ச்சல் தரைகள் அழிவதில்லை. மரங்களையும் இவை அழிப்பதில்லை.
  • செம்மறியாடுகள் மந்தையாகவே நடமாடுவதால் பராமரிப்பு எளிது. 100 ஆட்டிற்கு 1 நபர் போதுமானது.
  • அதிகச் செலவில் கொட்டகைத் தேவையில்லை. திறந்தவெளிகளிலும் பட்டிகளிலும் வளர்க்கலாம்.
  • மேலும் செம்மறி ஆடுகள் எல்லா தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை கொண்டவை. எடுத்துக்காட்டாக.
    • வெப்பப் பிததேசங்களிலும் காணப்படும் ஆடுகள் உடல் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் கம்பளமில்லாத உரோமத்துடனும், நீண்ட கால்களுடனும், பெரிய வால், காது, கழுத்து அமைப்புக்களுடனும் காணப்படுகின்றன.
    • குளிர்ப் பிரதேசங்களில் உள்ள செம்மறி ஆடுகள் உரோமத்துடன் காணப்படுவதால் மழைத்தண்ணீர் உடலில் பட்டு பாதிக்காதவாறு உள்ளன.
    • தீவனத் தட்டுப்பாடு உள்ள பிரதேசங்களில் வாழும் செம்மறியாடுகள் தங்களுக்கு தீவனம் சரிவரக் கிடைக்காத காலங்களில் உபயோகித்துக் கொள்வதற்காக கொழுப்புச் சத்தை தாங்கள் உடலில் (வால்) சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவை.
    • செம்மறி ஆடுகளில் இறைச்சி அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும்.
    • சாதாரணமாக 1-2 குட்டிகள் ஈனும்.
    • இவை வயல்வெளிகளில் மேயும் போது இதன் புழுக்கைகள் மற்றும் சிறுநீர் வயலுக்குச் சிறந்த எருவாகப் பயன்படுகிறது.

    • செம்மறியாட்டு இனங்கள்
      செம்மறியாடுகளை முக்கியமாக அவை தரும் பயன்களின் அடிப்படையில் ‘இறைச்சியின ஆடுகள்’ எனவும், ‘கம்பளியிழையின ஆடுகள்’ எனவும் இருவகையாகப் பிரிக்கலாம்.
      தமிழ்நாட்டில் இறைச்சியின செம்மறியாடுகளே அதிகமாக உள்ளன. அவை மேச்சேரி, சென்னை சிவப்பு, கீழக்கரிசல் இராநாதபுரம் வெள்ளை மற்றும் வேம்பூர் போன்றவையாகும்.
      கம்பளியிழை தரும் செம்மறியாடுகள், முக்கியமாக கம்பளியிழைக்காக மட்டுமே வளர்க்கப்பட்டாலும் இறைச்சியும் தருகின்றன. கோயமுத்தூர், குரும்பை, திருச்சிக் கருப்பு மற்றும் நீலகிரி ஆகியன கம்பளியிழையினச் செம்மறியாடுகளாகும்.
      ஒவ்வொரு இ
      இறைச்சியின் ஆடுகள்

      மேச்சேரி


      இந்த இன ஆடுகள் சேலம் மாவட்டத்தில் குறிப்பாக மேச்சேரி, கொளத்தூர், நங்கவள்ளி, ஓமலூர் பகுதிகளிலும், ஈரோடு மற்றும் தர்மபுரி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. மேச்சேரி இனச் செம்மறியாடுகள் இளம்பழுப்பு நிறம் கொண்டவை.
      இந்த இன ஆடுகளுக்கு கொம்புகள் கிடையாது. இதன் தோல், தரத்தில் மிக உயர்ந்தது. மேலும் மொத்த உடல் எடையில் இறைச்சி கொடுக்கும் விழுக்காடு மற்ற இனங்களைவிட அதிகம்.சென்னை சிவப்பு

      இந்த இனம், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காணப்படுகிறது. இதன் நிறத்தைக் கொண்டே சென்னை சிவப்பு எனக் கூறுகிறோம். இந்த இன கிடா ஆடுகளுக்கு நல்ல சுருட்டையான கொம்புகள் இருக்கும், பெட்டை ஆடுகளுக்கு கொம்பு கிடையாது.
      கீழக்கரிசல்

      இவை இராநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் காணப்படுகின்றன. கோடைக்காலங்களில் மேய்ச்சலுக்காக நீண்ட தூரம் செல்வதால் இந்த ஆடுகள் தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் காணப்படும். இந்த இன ஆடுகள் பழுப்பு நிறத்தில் இருக்கும். கீழ்த்தாடை, மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் கருப்பு நிறம் காணப்படும். கிடா ஆடுகளுக்கு நீண்ட,  திருகிய கொம்பு இருக்கும்.  பெட்டை ஆடுகளுக்கு கொம்பு கிடையாது.
      இராமநாதபுரம் வெள்ளை

      இந்த வகையான ஆடுகள், இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படுகின்றன. வெள்ளை நிறத்தில் இருக்கும் இவ்வின ஆடுகளில் தலை மற்றும் கால் பகுதிகளில் கரும்புள்ளிகள் காணப்படும். கிடா ஆடுகளின் கொம்புகள் தடித்து திருகி இருக்கும். பெட்டை ஆடுகளுக்கு கொம்பு இருக்காது.
      வேம்பூர்

      இந்த இனம் தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை மற்றும் நாகலாபுரம் ஊர்களிலும், புதூர் மற்றும் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்தச் செம்மறியாடுகள், வெள்ளை நிறத்துடன் பழுப்பு அல்லது சிவப்பு நிறத் திட்டுகள் கொண்டிருக்கும். இவற்றின் உயரம், மற்ற தமிழ்நாட்டு இனங்களை விட அதிகம். கிடாக்கள் திருகிய கொம்புடனும், பெட்டையாடுகள் கொம்பு இல்லாமலும் காணப்படும்.
      கம்பளியிழையின ஆடுகள்

      இதனை ‘குரும்பை ஆடு’ எனக் கூறுவர். இந்த இனம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சூலூர் வட்டத்தில் வசிக்கும் குரும்பர் இனத்தவர்களால் முதலில் வளர்க்கப்பட்டது. இது வெள்ளை நிறத்துடனும், முகம், காது மற்றும் கழுத்துப் பகுதிகளில் கருப்பு அல்லது செம்பழுப்பு நிறம் கலந்தும் காணப்படும். இதன் உரோமம் விரிப்புக் கம்பள உரோம வகையைச் சார்ந்தது. இது கம்பளிகள் நெய்யப் பயன்படுகிறது.
      திருச்சிக் கருப்பு

      இந்த இன ஆடுகள் பெரம்பலூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் காணப்படுகின்றன. இவை பெயருக்கேற்ப கருப்பாக இருக்கும்.  இதன் உரோம விரிப்புக் கம்பளி ரோம வகையைச் சார்ந்தது.
      நீலகிரி

      இந்த இன ஆடுகள் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் காணப்படும். இவை வெள்ளை நிறமாக இருக்கும். பழுப்பு நிறத்தில் வட்டங்கள் முகத்திலோ, உடலிலோ சில ஆடுகளில் இருக்கும். இந்த இன ஆடுகளில் கொம்புகள் கிடையாது. வால் நீளமாக இருக்கும். 20 விழுக்காடு ஆடுகள், ஈற்றிற்கு இரண்டு குட்டிகள் போடக்கூடியவை. தமிழ்நாட்டில் உள்ள இனங்களில் மென்மையான கம்பளி உரோமம் தரும் ஒரே இனம் இது மட்டுமேயாகும்.னத்தின் இருப்பிடம் மற்றும் குணநலன்களாவன.,


  • கொட்டகை அமைத்தல்



    நமது நாட்டில் ஆடுகள் பெரும்பாலும் பாரம்பரிய முறைகளிலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆடு வளர்ப்போர் அவற்றை விவசாய நிலங்களில் பட்டி போட்டு அடைத்தல், மர நிழல்களில் அடைத்தல் மற்றும் வீட்டை ஒட்டிய சிறு தடுப்புகளில் அடைத்தல் போன்ற முறைகளை மேற்கொள்ளுகின்றனர். குறைந்து வரும் மேய்ச்சல் நிலங்கள், வனப்பகுதிகளில் ஆடுகளை அனுமதிக்காமல் இருத்தல், தீவிர முறையில் ஆடு வளர்ப்பது போன்ற, தற்போதைய சூழ்நிலையில் ஆடுகளை கொட்டகை அமைத்து வளர்ப்பதே சிறந்தது. மேலும் அறிவியல் ரீதியாக ஆட்டுப்பண்ணை அமைத்தல் மற்றும் கொட்டகை பராமரிப்பு பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

    ஆடுகளுக்கான கொட்டகை அமைப்பதில் அதிக செலவில்லாத அதே சமயம் குறைந்தபட்ச வசதிகளுடன் கூடிய கொட்டகை அமைக்க வேண்டும். நல்ல காற்றோட்டமுள்ள, மேடான, வடிகால் வசதியுள்ள பகுதிகளில் கொட்டகை அமையவேண்டும். நீளவாக்கில், கிழக்கு - மேற்காக அமையும் படி கொட்டகை அமைத்தல் நல்லது. கொட்டகை சுற்றுச்சுவர்கள் ஏதும் இல்லாமல் இரும்புத்தூண்கள் அல்லது மரத்தூண்களைக்கொண்டு அதன் மேல் கூரை அமையும்படி அமைக்கவேண்டும்.
    கொட்டகையின் அளவு, அதில் அடைக்கக்கூடிய ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமையும். ஒரு வளர்ந்த வெள்ளாடு மற்றும் செம்மறியாட்டிற்கு ஏறத்தாழ 12 முதல் 15 சதுர அடி இடவசதி தேவை. என
    ஆடுகளை இரவில் மட்டும் கொட்டகையில் அடைத்து, பகலில் மேய்ச்சலுக்கு அனுப்புவதாக இருப்பின் மேற்கண்ட 600 சதுர அடி இடவசதி மட்டுமே போதுமானது. ஆனால் ஆடுகள் நாள் முழுவதும் கொட்டகையில் இருக்கும். கொட்டில் வளர்ப்பதாக இருப்பின் அதே அளவு இடவசதிக் கொட்டகையை ஒட்டிய திறந்தவெளிப் பகுதியில் கொடுக்கப்படவேண்டும். இது ஆடுகள் சுதந்திரமாக நடமாடவும் கொட்டகையில் சாணம் மற்றும் சிறுநீர் அதிகம் சேராமலிருக்கவும் தேவைப்படுகிறது.
    பொதுவாக ஆட்டுக் கொட்டகை மற்றும் அதனை ஒட்டிய திறந்தவெளிப் பகுதிக்கு கம்பிவலைகொண்டு தடுப்பு அமைப்பது எளிது மற்றும் செலவுக் குறைவானது. மேலும் இதனை தேவைக்கேற்ப வேண்டிய இடங்களில் பிரித்து கட்டிக்கொள்ளலாம். கம்பி வலையில் உயரம் செம்மறியாடுகளுக்கு ஏறத்தாழ 4 அடியும், வெள்ளாடுகளுக்கு 5 அடியும் இருப்பது அவசியம்.கொட்டகையின் நீளத்தை ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளலாம். அதிகபட்சம் 100 ஆடுகள் வரை ஒரு கொட்டகையில் அடைக்கலாம். அதிலும் கூட குட்டிகள், கிடாக்கள் இவற்றிற்கு தனித்தனி அமைப்புகள் இரப்பது சிறந்தது. கொட்டகையின் அகலம் நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு ஏறத்தாழ 20 அடி முதல் 25 அடி வரை இருப்பதே நல்லது. அதற்கு மேல் அதிகரிக்கும் போது காற்றோட்டம் பாதிக்கப்பட்டு கொட்டகையில் அமோனியா வாயுவின் தாக்கம் காணப்படும். இது போலவே கொட்டகையின் உயரம் முக்கியமானது. கொட்டகையின் நடுப்பகுதி ஏறத்தாழ 9-12 அடி உயரத்திலும், சரிவாக பக்கங்களில் 6-9 அடி உயரத்திலும் அமைய வேண்டும். செம்மறியாடுகளை விட வெள்ளாடுகளுக்கு உயரமான கொட்டகை அமைப்பது நல்லது.

    மேலும் பல கொட்டகைகள் உள்ள ஆட்டுப் பண்ணைகளில் அவற்றிற்கிடையே போதுமான இடைவெளி இருந்தால்தான், காற்றோட்டம் தடைபடாமல் இருக்கும். இடைவெளி கொட்டகையின் உயரத்தைப் போல் குறைந்தது இருமடங்கு இருக்கவேண்டும்.
    கொட்டகையின் கூரை ஆஸ்பெஸ்டாஸ் (கல்நார்), மங்களூர் ஓடு அல்லது கீற்றுக்களைக் கொண்டு அமைக்கலாம். கீற்றுக் கொட்டகை அமைத்தல் செலவினைக் குறைவாக இருந்தாலும், தீப்பிடிக்கும் அபாயம், பூச்சிகளின் தொல்லை, அடிக்கடி மாற்ற வேண்டிய சிரமம் போன்ற சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பது கொஞ்சம் செலவு அதிகம் எனினும் நிரந்தரமான ஒன்று. முறையான பண்ணை அமைப்பவர்கள் வங்கிகளில் கடன் வாங்கி இதனைப் பின்பற்றலாம்.
    ஆட்டுக் கொட்டகைக்கு மண்தரையே போதுமானது. தினம் ஒரு முறை சுத்தமாக கூட்டி சாணத்தை அப்புறப்படுத்தி விடவேண்டும். ஆடுகளின் சாணம் வறண்டே இருப்பதால் கூட்டி அள்ளுவது சுலபம். சிறுநீரின் அளவும் குறைவே என்பதால், மண்தரை அதனை உறிஞ்சிக்கொள்ளும். கொட்டில் முறையில் ஆடுகள் வளர்ப்போர், கொட்டகையில் உள்ள ஈரம் உலரும்படி செய்ய பகலில் ஆடுகளை திறந்த வெளிப்பகுதியில் மேய விடலாம். தினமும் அள்ளப்படும் சாணத்தை எருக்குழியினில் சேமித்து வைத்து தேவைப்படும்போது உரமாகப் பயன்படுத்தலாம் அல்லது விற்பனை செய்து விடலாம். வெள்ளாட்டின் எருவிற்கு அதிகத் தேவை உண்டு.
    உயர்ரக ஆடுகளை வைத்திருப்போர் “துவாரத்தள அமைப்பு முறை” (Slatted Floor) எனப்படும் முறையிலும் தரையை அமைக்கலாம். இதில் தரையிலிருந்து சுமார் 1 1/2 - 2 அடி உயரத்தில் 1 1/2 முதல் 2 அடி அங்குல இடைவெளிவிட்டு வரிசையாக வைக்கப்பட்டு அதன் மேல் ஆடுகள் விடப்படும். ஆடுகளின் சாணம் தரையில் தங்காமல் இடைவெளிகளில் கீழே விழ வேண்டும். இம்முறையில் கொட்டகையை தினமும் சுத்தம் செய்யும் அவசியம் இல்லை. சாணம் ஓரளவு சேர்ந்தபிறகு அகற்றினால் போதும்.
    ஆடுகளுக்கான தண்ணீர் மற்றும்  தீவனத் தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள் சிமெண்ட் கொண்டு செய்யப்பட்ட வட்ட வடிவிலான அல்லது நீள்செவ்வக வடிவிலான தொட்டிகளாக இருப்பது சிறந்தது. இவற்றை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை உட்பக்கம், சுண்ணாம்பு அடிக்கவேண்டும். ஏறத்தாழ 20 ஆடுகளுக்கு ஒரு தொட்டி தேவை.
    இரும்புத்தகடு (அ) மரத்தினால் செய்யப்பட்ட தீவனத்தொட்டிகள் சுமார் 1 1/2 அடி உயரத்தில் 1 1/2 அடி உள்பக்கம் குழியாக இருக்குமாறு அரை வடட வடிவில் அமைய வேண்டும். நீளம் 5-6 அடி இருக்கலாம். 10-12 ஆடுகளுக்கு ஒரு தீவனத் தொட்டி தேவை. வெள்ளாடுகள் இவற்றினுள் ஏறிப்படுத்து அசுத்தம் செய்வதைத் தடுக்க அவற்றின் தலையை மட்டும் நுழைக்கும் அளவிற்கு கம்பித்தடுப்புகள் அமைக்கலாம். இவற்றை அடர்தீவனம் மற்றும் வெட்டப்பட்ட பசுந்தீவனங்கள் அளிப்பதற்குப் பயன்படுத்தலாம். ஆடுகளுக்கு மரத் தழைகளை அளிக்கும் போது அவற்றைக் கட்டித் தொங்கவிடுவது  தீவன விரயத்தைக் குறைக்கும்.
    ஆட்டுக் கொட்டகையில் பேன்கள், உண்ணிகள், தெள்ளுப்பூச்சிகள் ஆகியவை அதிகம் காணப்பட்டால் கிருமி நாசினி (சுமத்தியான், மாலத்தியான், பியூடாக்ஸ்) கொண்டு மருந்தடிக்கலாம். குட்டிகளை அடைக்கும் கொட்டகையில் ஒவ்வொரு குட்டியீனும் பருவத்திற்கு முன்பு மண் தரையை லேசாக சுரண்டி அகற்றி புதிய மண் கொட்டுவது நல்லது. இது கழிச்சல், நிமோனியா போன்ற நோய்களின் தாக்கத்தைக் குறைக்கும்.
  •  50 ஆடுகளுக்கு கொட்டகை அமைப்பதாக இருந்தால் 50 x 12 = 600 சதுர அடி அவசியம். இதற்கு 30 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட கொட்டகை அமைத்தால் போதுமானது.
செம்மறியாடு பராமரிப்பு முறைகள்

சரியான பராமரிப்புடன் சினை ஆடுகளை வளர்த்தால், ஈனும் குட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அவற்றை நல்ல ஆரோக்கியத்துடன் வளர்க்க முடியும். அதற்கு கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
  • குட்டி ஈனும் தருணத்தில் உள்ள சினை ஆடுகளை தனிக் கொட்டிலில் வைத்துக் கவனத்துடன் வளர்க்கவேண்டும்.
  • சினை ஆடுகளை ஊசி போடுதல், மருந்தளித்தல் என அடிக்கடி தொந்தரவு கொடுத்தல் கூடாது. முடிந்தவரை தடுப்பூசி மருந்துகளை ஓரிரு தடவைகளில் போட்டு முடித்து விடுதல் நலம்.
  • குட்டி ஈனுவதற்கு 3-4 வாரங்கள் முன்பு அதிக அளவில் அடர்தீவனமும் அளிக்கவேண்டும். அவ்வாறு அளித்தால் குட்டி ஈன்றவுடன் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.
  • சரியான தீவனம் அளிக்கப்படவில்லையெனில் கரு கலைதல், குட்டி இறந்து பிறத்தல், இரத்தத்தில் விஷத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
  • ஈன்ற குட்டிகளை 4-6 நாளில் தாயிடமிருந்து பிரித்துக் குட்டிகளின் கொட்டிலில் வளர்க்கவேண்டும். முடிந்தவரை குட்டிகளுக்கு மென்மையான தரை அமைப்பு கொண்ட தனித்தனி கொட்டில் அமைத்தல் நலம்.
  • குட்டி ஈன்ற ஆடுகளின் பால் தரும் காலத்தைக் கவனித்துக் குறித்து வைத்தல் நலம். பொதுவாக 142-150 நாட்கள் வரை இருக்கும். இதைவிடக் குறைவாக இருந்தால் பால் தரும் நாட்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
  • குட்டிகளை குளிர், பனி, மழை வெய்யிலிருந்து முறையாகப் பாதுகாக்கவேண்டும்.
குட்டி ஈனும் போது கவனிக்க வேண்டியவை
  • குட்டி ஈனும் தருணத்தில் ஆடானது மந்தையிலிருந்து பிரிந்து விடும்.
  • ஆடு அமைதியற்று, மடி பெருத்து, பெண் இனப்பெருக்க உறுப்புகள் சிவந்த வண்ணம் காணப்படும்.
  • பொதுவாக ஆரோக்கியமான ஆடுகளில் குட்டி ஈனுதல் தானாகவே நடக்கும் எனினும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுப்பது நன்மையாகும்.
குட்டிகளைப் பிரித்துப் பாதுகாத்தல்
  • 90 நாட்களில் குட்டியைத் தாயிடமிருந்து பிரித்துவிட வேண்டும். பால் உற்பத்தி தாய் ஆட்டிடம் குறைவாக இருக்கும்பட்சத்தில் 60 நாட்களிலிலேயே பிரித்து விடுதல் நலம்.
  • தாய்ப்பாலுக்குப் பதில் வேறு கலப்புத் தீவனங்கள் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பால் அளித்தல் அவசியம்.
  • முள், குழி, அதிகக் கற்கள் கொண்ட பகுதிகளில் குட்டிகளை மேய விடுதல் கூடாது. ஏனெனில் அவற்றுக்குக் கண் எரிச்சல், ஒவ்வாமை மற்றும் ரோமம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

செம்மறியாடு பராமரிப்பு அட்டவணை

பண்ணையில் செம்மறி ஆடுகள் பராமரிப்பிற்கும், உரோமம் உரித்தலுக்கும் மித வெப்பப் பகுதிகளில் பின்பற்றப்படும் மாத அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி

பதிவேடுகள் சரிபார்த்தல், காதில் அடையாளக்குறியிடுதல். குளிர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கொட்டகையை அமைத்தல், குட்டி ஈனும் தருணத்தில் உள்ள சினைச் செம்மறியாடுகளைப் பாதுகாத்தல், நன்கு தீவனம் அளித்தல், குட்டி ஈனுவதற்குக் கொட்டகையை தயார் செய்தல், வால் பகுதி நீக்கம், ஈன்ற குட்டிகளுக்கு முதல் உணவு ஊட்டம், வசந்தகால கலப்பிற்குப் பொலி கிடாக்களைத் தயார் செய்தல் மற்றும் சினை ஆடுகளை கிளாஸ்டிரிடியம் கிருமிகள் தாக்காமல் இருக்க அவற்றுக்குக் கிளாஸ்டிரிடியம் தடுப்பூசி அளித்தல்.
பிப்ரவரி

குட்டி ஈனுதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் தாய் ஆடுகளையும், குட்டிகளையும் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுத்தல், குட்டி ஈன்ற இளம் தாய்களுக்கு நிறையான தீனியளித்தல், தாயிடமிருந்து பிரிக்கப்படாத குட்டிகளை கவனித்துத் தீனியளித்தல், அடையாளக்குறி இடுதல், வாலை நறுக்கி விடுதல், குட்டிகளின் வளர்ச்சிப் பதிவேட்டில் செய்து முடித்த பராமரிப்பு முறைகளைப் பட்டியலிடுதல் இம்மாத இறுதியில் இனக்கலப்பு செய்ய வேண்டிய, சூட்டில் உள்ள ஆடுகளைக் கண்டறிந்து இனச்சேர்க்கை அல்லது செயற்கைக் கருத்தரிப்புக்குத் தயார் செய்தல், ஆட்டு அம்மைக்குத் தடுப்பூசி அளித்தல்.
மார்ச்

மேற்கண்ட குட்டி ஈனுதல், தீனியளித்தல் பராமரித்தல் அடையாளக் குறியிடுதல் போன்ற செயல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும். மேலும் செம்மறியாடுகளை அவ்வப்போது கழுவிச் சுத்தம் செய்தல், உரோம வளர்ச்சியை கவனித்தல், உரோமம் உற்பத்தியாகும் ஆடுகளைக் கவனித்தல், ரோமங்கள் கத்தரித்தல், இரசாயனத்தில் அமிழ்த்துதல் மற்றும் தடுப்பூசி அளித்தல்.
ஏப்ரல்

ரோம வளர்ச்சி கண்டு கத்தரித்தல், இரசாயனக் குளியலின் தொடர்ச்சி, ஈன்ற குட்டிகளைத் தாயிடமிருந்து சரியான நாட்களில் பிரித்து, அதைப் பதிவேடுகளில் குறித்தல், பழைய பயனற்ற ஆடுகளை மந்தையிலிருந்து நீக்குதல், நீல்வோம், சல்பேட் போன்ற குடற்புழு மருந்துகளை அளித்தல், ஜோனீஸ் நோய், கோமாரி நோய் போன்ற நோய்களுக்குத் தடுப்பூசி போடுதல்.
மே

தாயிடமிருந்து பிரித்த குட்டிகளுக்குத் தாய்ப்பாலுக்குப் பதில் வைக்கோல், தட்டு மற்றும் அடர்தீவனம் அளித்தல், குட்டிகளை ஒட்டுண்ணி நீக்கத்திற்காக வாய் மூலம் திரவ மருந்தளித்தல், காலை, மாலையில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லல் மதிய வேளையில் மந்தையை கொட்டகை அல்லது மர நிழலில் ஓய்வெடுக்க வைத்தல், மரத்தின் இழை தழைகளை வெட்டி ஆடுகளுக்கு அளித்தல், ஜோனீஸ் நோய், கோமாரி நோய்களுக்குத் தடுப்பு மருந்தளித்தல் சரியான கொட்டகை வசதி மற்றும் குடிநீர் அளித்தல்.
ஜீன்

சினை ஆடுகள் பராமரிப்பு, மர இழைத் தீவனமளிப்பு, நல்ல கொட்டகை மற்றும் தேவையான அளவு குடிநீர் அளிப்பு, குட்டி போடுத் கொட்டிலைத் தயார் செய்தல், கிருமி நாசினிக் கொண்ட கொட்டகை முழுவதும் சுத்தம் செய்தல், துள்ளுநோய், தொண்டை அடைப்பான் நோய், டெட்டானஸ் போன்ற நோய்களுக்குத் தடுப்பூசி அளித்தல்.
ஜீலை

செம்மறியாடுகளைக் கழுவி விடுதல், ரோமம் கத்தரித்தல் உரோமம் போடுதல், இரைப்பை குடல் நோய்களுக்கு மருந்து அளித்தல், தொண்டை அடைப்பான் நோய்த் தடுப்பூசி போடுதல், சினை ஆடுகளைக் கவனித்தல் இலையுதிர்க்கால குட்டி ஈனும் தருணம், குட்டி ஈனுதலில் பராமரிப்பு, மேய்ச்சல் நேரம், காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அடையாளக் குறியிடுதல், வாலை நீக்குதல், இலையுதிர்க்கால இனச்சேர்க்கைக்கு பெட்டை ஆடுகளைத் தயார் செய்தல், இரைப்பைக் குடல் நோய்களுக்கு மருந்து அளித்தல் போன்றவை.
ஆகஸ்டு

குட்டி ஈனுதல், சினை ஆடுகள் பராமரிப்பு, புதிதாகப் பிறந்த குட்டிகளைக் கவனித்தல், சினைக்குத் தயாரான ஆடுகளை இனச்சேர்க்கை செய்தல், பொலி கிடாக்களைத் தயார் செய்தல் மற்றும், தேவையான மருந்துகள் அளித்தல்.
செப்டம்பர்

இனச்சேர்க்கைக்குத் தேவையான பொலிகிடாக்களைத் தயார் செய்தல், இனச்சேர்க்கை செய்தல், தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குட்டிகளுக்கு உபதீனியளித்தல், குட்டிகளின் வளர்ச்சியை கவனித்துப் பதிவு செய்தல் மற்றும் மருந்துகள் அளித்தல்.
அக்டோபர்

இலையுதிர்கால இனக்கலப்புத் தொடரும், பிரித்த குட்டிகளுக்குத் தீவனமளித்தல், குட்டிகளின் எடையை அளவிடல், மிகக்குறைந்த வளர்ச்சியுள்ள குட்டிகளை மந்தையிலிருந்து பிரித்தல், துள்ளுநோய், ஜோனீஸ் நோய்களுக்குத் தடுப்பூசியும் மருந்துகளும் அளித்தல்.
நவம்பர்

பனிக்கால மேய்ச்சல், குடற்புழுத் தாக்குதலை அறிந்து மருந்தளித்தல், ஜோனீஸ் நோய்க்குத் தடுப்பூசி அளித்தல், வேலி அடைத்தல் போன்றவை.
டிசம்பர்

குளிரிலிருந்து பாதுகாக்க ஏற்றவாறு கொட்டகை அமைத்தல், குறித்து வைத்த பதிவேடுகளைச் சரிபார்த்தல் குட்டி ஈனத் தயாராக உள்ள ஆடுகளுக்கு முறையாகத் தீவனமளித்துப் பராமரித்தல், மந்தையில் பெருகி உள்ள குட்டிகளின் எண்ணிக்கைக்கேற்ப கொட்டகையை விரிவுபடுத்தல் அல்லது அதிகப்படி ஆடுகளை விற்று விடுதல்.


செம்மறி ஆட்டைத் தாக்கும் நோய்கள்

1) கோமாரி நோய்
 அறிகுறிகள்
  • நாக்கு, மடி மற்றும் குளம்புகளுக்கிடையில் கொப்புளமும் புண்ணும் காணப்படுதல், தீவனம் எடுக்க இயலாமை, காய்ச்சல், குட்டிகளில் இறப்பு, சினை ஆடுகளில் கருச்சிதைவு ஏற்படுதல்.
சிகிச்சை
    1. சமையல்சோடா உப்புக் கலந்த நீரில் கால் மற்றும் வாய்ப்புண்களை கழுவி மருந்திடுதல்.
    2. போரிக் பவுடருடன் கிளிசரின் கலந்து வாயில் தடவவேண்டும்.
2) வெக்கை சார்பு நோய்
  • செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளைத் தாக்கும் மிகக்கொடிய தொற்றுநோய் ஆகும்.
அறிகுறிகள்
  • வாய்ப்புண், மூச்சுத்திணறல், கழிச்சல், கண் மற்றும் மூக்கிலிருந்து நீர் வடிதல், காய்ச்சல்.
தடுப்பு முறை
  • தடுப்பூசி போடுதல் அவசியம்.
3) ஆட்டு அம்மை
  • வெள்ளாடுகளை விட செம்மறியாடுகளையே அதிகம் தாக்குகிறது.
அறிகுறிகள்
  • உதடு, மூக்கு, கண் இமை, காது, காலின் அடிப்பகுதி, மடி, இனப்பெருக்க உறுப்பு போன்ற இடங்களில் முத்துப்போன்ற அம்மைக் கொப்புளங்கள் காணப்படுதல், காய்ச்சல், உணவு உட்கொள்ளாமை.
4) நீலநாக்கு நோய் அறிகுறிகள்
  • காய்ச்சல், சளி, தும்மல், இருமல், சுவாசிப்பதில் சிரமம், சளி கெட்டியாவதால் மூக்கடைப்பு ஏற்படுதல், நான்கு நாட்களில் உதடு, மூக்கு, நாக்கு, குளம்பின் மேல் பகுதி மற்றும் கீழ்த்தாடை வீங்குதல், நாக்கு நீல நிறமாக மாறுதல், தீவனம் உட்கொள்ளாமை மற்றும் ஒரு வாரத்தில் இறந்து விடுதல்.
சிகிச்சை
  • போரிக் பவுடரைத் தேங்காய் எண்ணெயில் கலந்து, புண்ணுக்கு தினம் இரு முறை போடவேண்டும்.
  • நோய் எதிர்ப்பு மருந்துகள் 5 நாட்களுக்குள் கொடுக்கவேண்டும்.
  • மென்மையான தீவனங்களை கொடுக்கவேண்டும்.
நுண்ணுயிரி நோய்கள்

5) அடைப்பான்
 நோய் அறிகுறிகள்
  • எந்தவித நோய் அறிகுறிகளும் இல்லாமல் திடீர் இறப்பு, இறந்தபின் ஆசனவாய், மூக்கு, காது போன்றவைகளிலிருந்து உறையாத கருஞ்சிவப்பு இரத்தம் வெளியேறுதல்.
தடுப்பு முறை
  • இறந்த ஆடுகளை ஆழமாகக் குழிவெட்டி சுண்ணாம்புத் தூள் தெளித்து மூடிவிடவேண்டும். தடுப்பூசி போடுதல் அவசியம்.
6) தொண்டை அடைப்பான்

அறிகுறிகள்
  • பாதிக்கப்பட்ட ஆடுகளில் அதிகக் காய்ச்சல், மூச்சுவிட சிரமம், இருமல், கீழ்த்தாடையில் வீக்கம், திடீரென இறந்து விடுதல்.
சிகிச்சை
  • ஆரம்பகால நோய்க்கு நோய் எதிர்ப்பு மருந்து கொடுத்தல் மற்றும் நோய் தீர்க்கும் முன் தடுப்பூசி போடுதல் அவசியம்.
7) துள்ளுமாரி நோய்
  • எல்லா வயது ஆடுகளையும் பாதிக்கும். ஆனால் இளம் வயது ஆடுகளே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. மழைக்குப்பின் புதிதாக முளைத்த பசுமையான புல் வெளியில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளுக்கு இந்நோய் ஏற்படும்.
அறிகுறிகள்
    1. ஆடுகள் மேயாமல் சோர்ந்து வயிற்று வலியால் பற்களைக் கடிக்கும்.
    2. சாணம் இளகி, இரத்தம் கலந்திருக்கும்.
    3. ஆடுகள் நடக்கும் போது கால்கள் பின்னி, கழுத்து விரைத்து, கண்கள் பிதுங்கி, மயங்கி தலை சாய்ந்து கீழே விழும்.
    4. இறப்பதற்கு முன் வலிப்பு ஏற்பட்டு துள்ளி விழும்.
தடுப்பு முறைகள்
  1. சூரிய உதயத்திற்குப் பின் ஆடுகளை 1 மணி நேரம் கழித்து மேய்ச்சலுக்கு அனுப்பவேண்டும்.
  2. பருவமழைக்கு முன் தடுப்பூசி போடுதல் அவசியம்.
ஒட்டுண்ணி நோய்கள்

8) அக ஒட்டுண்ணிகள்
  • ஈரல் புழு, இலைப்புழு, உருண்டைப் புழு வகையைச் சேர்ந்த வயிற்றுப்புழு மற்றும் பருப்புழுக்கல் ஆகும்.
பரவுதல்
  • மேய்ச்சலின் போது ஆடுகளின் வயிற்றுக்குள் செல்கின்றன.
அறிகுறிகள்
  • இரத்தசோகை, பசியின்மை, எடைக்குறைதல், தள்ளாடி நடத்தல், தாடை வீங்குதல், உரோமம் கொட்டுதல், வயிற்றுப்போக்கு.
தடுப்பு முறைகள்
  • குடற்புழு நீக்கம் செய்தல்
  • சாணத்தை அப்புறப்படுத்தி, தரையைக் கழுவுதல்
  • கிருமி நாசினி மருந்தைப் பயன்படுத்தி சுத்தம் செய்தல்.
9) புற ஒட்டுண்ணிகள்

உண்ணி, பேன், தெள்ளுப்பூச்சி மற்றும் சிற்றுண்ணிகள் (mite) ஆகும்.

பாதிப்புகள்
  1. தோல் தடித்தல், சொறி உண்டாகுதல், முடி உதிர்தல், இரத்த சோகை, இரத்த ஒட்டுண்ணிகள் பரவுதல், தேய்த்துக் கொள்ளுதல், கடித்துக் கொள்ளுதல், அஜீரணம், இளைத்து எடைக்குறைதல் போன்றவையாகும்.
  2. மருந்துக் குளியல், தெளித்தல் (அ) தூவுதல் முறை, இவற்றிற்கு கீழ்க்கண்ட மருந்துகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
  3. மாலத்தியான்  0.5 சதவிகிதம், சுமித்தியான் 1/100 (தெளிக்கும்  முறை)
  4. பியூட்டாக்ஸ் 0.02 சதவிகிதம் லிண்டேன் 0.03 சதவிகிதம்
  5. ஐவர்மெக்டின் 0.2 மி.கி / கி.கி உடல் எடைக்கு
10) ஒரு செல் நுண்ணுயிரி நோய்கள்

இவற்றில் இரத்தக் கழிச்சல் நோய் முக்கியமானதாகும். ஆட்டுக் குட்டிகளை அதிகம் தாக்கும்.

அறிகுறிகள்
  • காய்ச்சல்
  • சளி மற்றும் இரத்தத்துடன் கழிச்சல்
  • வாலைத் தூக்கி முக்குதல்
தடுப்பு முறை
  • தரை ஈரமில்லாமல் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.
  • குட்டிகளுக்கு பாலில் ஆம்பரோலியம் கலந்துக் கொடுத்தல்
  • குட்டிகள் சாணத்தை நக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அம்மோனியா 10 விழுக்காடு கொட்டிலில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
  • கன்று வீச்சு நோய்
  • டெட்டானஸ்
  • சுழல் நோய்
ஆடுகளின் எடை அதிகரிப்பதற்கும், குட்டிகளில் இறப்பை தவிர்க்கவும் குடற்புழு நீக்கம் செய்வது அவசியம்.
குடற்புழு நீக்க அட்டவணை
ஆடுகளின் வயது
பரிந்துரைகள்
2வது மாதம்நாடாப்புழுக்களுக்கான மருந்து
3வது மாதம்நாடாப்புழுக்களுக்கான மருந்து
4வது மாதம்நாடாப்புழுக்களுக்கான மருந்து
5வது மாதம்உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
6வது மாதம்உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
9வது மாதம்உருண்டை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
12வது மாதம்தட்டைப் புழுக்களுக்கான மருந்து
ஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்குப்பின் இருமுறையும் கொடுக்கவேண்டும்.
மாதம்
பரிந்துரைகள்
ஜனவரி - மார்ச்தட்டைப்புழுவிற்கான மருந்து
ஏப்ரல் - ஜீன்உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
ஜீலை - செப்டம்பர்தட்டைப் புழுவிற்கான மருந்து
அக்டோபர் - டிசம்பர்உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை.
  1. ஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்யவேண்டும்.
  2. தூள் மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
  3. அதிகாலையில், வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.
  4. மருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  5. குடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக கலந்துக் கொடுக்கக்கூடாது.
  6. குடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது.
  7. தொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.
11) புருஸெல்லோசிஸ்

இது நுண்ணுயிரிகளால் விழிச்சவ்வு, இமைப்படலம் வழியாகவும் உணவு மூலமாகவும் பரவுகிறது. பாதிக்கப்பட்ட ஆட்டின் பால் கீழே சிந்தினாலும் அதிலுள்ள ஆயிரக்கணக்கான கிருமிகளால் பரவும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஆட்டின் குட்டி இறந்து விடுவதால் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
அறிகுறிகள்

இந்நோய் பாதிக்கப்பட்டால் சினையாட்டின் கரு கலைந்து விடலாம் அல்லது இரண்டு மூன்று மாதங்களில் கருவானது இறந்து பிறந்துவிடும். இது எளிதில் பரவக்கூடிய நோய் ஆதலால் அடுத்தடுத்து சினை ஆடுகள் வீச்சுக் குட்டிகளை ஈனும், இந்நோய் தாக்கப்பட்ட ஆடுகள் அடுத்து இனக்கலப்பு செய்வது கடினம், செய்தாலும் குட்டிகள் இறந்துபோகலாம்.
கட்டுப்படுத்தும் வழிகள்

இந்நோய் பாதித்துள்ளதை தனிப்பட்ட சோதனைகள் மூலம் மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். நிலையற்ற காய்ச்சல் பாதித்த மனிதர்களாலும் இந்நோய் பரவ வாய்ப்புள்ளது, மடி வீக்கம் காணப்படுவதால் இனப்பெருக்க அளவு குறையும்.

இந்நோய்க்குச் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை ஆதலால், நோய்த்திறன் வீரியம் குறைக்கப்பட்ட, கிருமிகள் நீக்கப்பட்ட தடுப்பூசிகளைச் சரியான சமயத்தில் போடுதல் நலம். முறையான பராமரிப்பு முறைகளை மேற்கொள்ளல் அவசியம்.
டெட்டானஸ் (அ) இரணஜன்னி

இது மனிதனில் அல்லது விலங்குகளில் ஏற்படும் காய்ச்சல் போன்ற நோய்களால் எளிதில் பரவக்கூடிய நோய் ஆகும்.
பரவல்

காயங்கள் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது. காயங்களில் உள்ளக் கிருமிகளின் ஸ்போர்கள் எளிதில் வளர்ச்சியடைந்த பெருகுகின்றன. இவை சில விஷப்பொருட்களை உற்பத்தி செய்கின்றன. அவற்றை ஆடுகளின் உடல் எளிதில் கிரகித்துக் கொள்கிறது. மண், ஆட்டின் கழிவுகளில் உள்ள நுண்ணுயிர்கள் காயங்களில் தொற்றிக் கொள்கின்றன. இவை ஆட்டின் குடல் பகுதிகளுக்குச் சென்று நோயைப் பரப்பத் தேவையான விஷப்பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
அறிகுறிகள்

இந்நோய் தாக்கியுள்ளதை அறிய, 3 நாட்களிலிருந்து 2 வாரங்கள் வரை ஆகலாம். இது பொதுவாக எல்லா கால்நடைகளையும் தாக்கினாலும், குதிரைகளிலும் செம்மறி ஆட்டுக் குட்டிகளிலும் அதிகமாகத் தாக்குகிறது.
இந்நோய்த் தாக்கிய ஆடுகளின் கழுத்து, தலை, வால் ஆகியவை விறைத்துக் கொள்ளும். ஆடுகள் நகர முடியாமல் அவதிப்படும். தசைகள் இழுத்துப் பிடித்துக் கொள்வதால் வலி இருக்கும். இவ்வாறு உடல் பகுதிகள் விறைத்துக் கொள்வது நோய் தாக்கி 12 மணியிலிருந்து 24 மணி நேரத்திற்குள் தெரியும். குட்டி 4-5 மாதத்தில் ஆட்டின் குட்டி இறந்து பிறக்கும். முடிவில் காதுகள் நேராகவும், மூக்குப் பகுதிகள் விரிந்தும், சவ்வுகள் நீட்டிக்கொண்டிருக்கும். வாய்கள் விறைத்துக் கொள்வதால் தீவனங்களை மெல்ல முடியாது. எனவே தான் இது ‘வாய்ப்பூட்டு’ நோய் எனப்படும்.
நோய்க்கட்டுப்பாடு

சரியான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். காயடிக்கும் போது எந்த நோய்த் தொற்றும் இன்றிப் பார்த்துக் கொள்ளுதல் நலம். 3 வார இடைவெளிகளில் 2 ஊசிகள் அளித்து எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.
முதலில் விஷம் எதிர்ப்பு ஊசி போட்டுப் பின்பு காங்களுக்குச் சரியான சிகிச்சையளிக்க வேண்டும். பென்சிலின் மருந்து அளிப்பதும் நன்மை பயக்கும். பாதிக்கப்பட்ட ஆட்டைத் தனி இருட்டறையில் வயிற்றில் குழாய் உணவளித்துப் பராமரிக்கலாம்.
12) லிஸ்டிரியோசிஸ் (அ) சுழல் நோய்

பரவல்


இந்நோய் பரப்பும் கிருமிகள் சிறுநீர், பால், கழிவுகள் போன்ற கழிக்கப்பட்ட விலங்குகளின் கழிவுகளின் மூலம் பரவுகிறது. இது மனிதன் மற்றும் விலங்குக் கழிவுகளில் பல மாதங்கள் வரை வாழக்கூடியது. கால்நடைகளில் காணப்படும் இரத்தம் உறிஞ்சும் உனி போன்ற ஒட்டுண்ணிகளின் இரத்தத்திலும் இந்நோய்க் கிருமிகள் காணப்படுகின்றன.
அறிகுறிகள்

குளிர் காலத் தொடக்கத்திலிருந்து தான் இந்நோய் பரவ ஆரம்பிக்கும். மூளைத் தண்டுவட ஏற்பட்டு தண்டுவட நரம்புப் பிடிப்பு ஏற்படும். ஆடுகள் குரல் வளை, தாடை போன்றவற்றில் தசைகள் பிடித்துக் கொள்வதால் பக்கவாதம் போன்று இருக்கும். பாதிப்பு அதிகமாக இல்லாத ஆடுகள் மட்டுமே உயிர் பிழைக்க முடியும். இரத்தத்தில் நுண்ணுயிரிகள் பெருகி மூளைக் காய்ச்சலை அதிகரிக்கும். பாதிக்கப்பட்ட சினை ஆடுகளின் குட்டி 4-5 மாதத்தில் இறந்து விடும். கோழிகளில் இந்நோய் தாக்கியவுடன் கழுத்துப்பிடிப்பு, கால்கள் தடுமாற்றம் போன்ற அறிகுறிகளுடன் இறந்து விடும்.
சிகிச்சை

டெட்ராசைக்ளின் மருந்து கால்நடைகளில் செம்மறி ஆடுகளை விட நல்ல பயன் தருகிறது. இம்மருந்தை எவ்வளவு விரைவில் தருகிறோமோ அவ்வளவுக்கு பலன் கிடைக்கும்.
பாதிக்கப்படாத ஆடுகளைக் கொன்று புதைத்து விடுதல் மற்ற ஆடுகளுக்குப் பரவாமல் தடுக்க உதவும்.
13) விப்ரியோசிஸ் கருச்சிதைவு நோய்

இந்நோய் ஆண் ஆடுகளின் இனப்பெருக்க உறுப்புகள் மூலமாக பரவுகிறது. பாதிக்கப்பட்ட கிடாக்கிலிருந்து எடுக்கப்பட்ட விந்தணுக்களில் இந்நோய் பரப்பும் கிருமிகள் அதிகம் காணப்படுகின்றன. விந்தணுவை சேகரித்து வைக்கும். மிகக்குறைந்த வெப்பநிலைகளில் கூட இவ்வுயிரிகள் உயிர் வாழக்கூடியவை. பாதிக்கப்பட்ட பெண் கால்நடைகளிலும் இந்நோய் காணப்படுகிறது.
அறிகுறிகள்

மந்தையில் கால்டைகள் சினையாவது குறையும் போது தான் மலட்டுத்தன்மை பாதிப்பு தெரியவரும். முதல் முறை சினைக்கு வரும் மாடுகள் அதிக அளவில் இந்நோயால் பாதிக்கப்படுகின்றன. கரு கலைதல் அல்லது கரு இறந்து பிறத்தல் அல்லது 6வது மாதத்தில் அதிகமாக இருக்கும். பாதிக்கப்பட்ட பொலிக் கிடாக்களோ அவற்றின் விந்தணுக்களிலோ எந்த ஒரு மாற்றமும் தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட ஆடுகள் இனக்கலப்பு செய்யும் போது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் பரவுகிறது. செம்மறியாடுகளில் பாதித்தவுடன் சினைப்பையிலிருந்து திரவம் வழிந்து சினைக் கால முடிவில் வீச்சுக் குட்டியாக வெளிவந்துவிடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
  • குளோரடெட்ராசைக்ளின் போன்ற நோய்க்கிருமி கட்டுப்படுத்தியைப் பயன்படுத்துவதால் ஓரளவு எதிர்ப்புச் சக்தி கிடைக்கலாம். வீரியம் குறைந்த தடுப்பூசியைப் பயன்படுத்தி இதற்கு எதிர்ப்புச் சக்தியை பாதிக்கப்படாத ஆடுகளுக்குக் கொடுக்கலாம். எனினும் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு சிகிச்சையளிப்பது கடினம்.
  • ஆணினப்பெருக்க உறுப்பின உறையின் மீது நோய்க்கட்டுப்படுத்தும் மருந்துகளை அளிக்கலாம். பாதிக்கப்பட்ட பெட்டை ஆடுகளுக்கு சிகிச்கைகள் ஏதும் இல்லை.
செம்மறியாடுகளுக்கான தடுப்பூசி அட்டவணை
வ. எண்
நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர்முதல் தடுப்பூசிதொடர் தடுப்பூசிகள்சிறப்புக் கவனம்
1.நீல நாக்கு நோய்6 மாத வயதில்ஆண்டுக்கு ஒரு முறை-
2.செம்மறி ஆட்டம்மை3-6 மாத வயதில்ஆண்டுக்கு ஒரு முறைகோடைக்காலத்திற்கு முன்னர்
3.துள்ளமாரி நோய்6 மாத வயதில்ஆண்டுக்கு ஒரு முறைமழைக்காலத்திற்கு முன்னர் மற்றும் குட்டி ஈனும் பருவங்களில் தாய் ஆடுகளுக்கு போடவும்.
4.கோமாரி நோய்2 மாத வயதில்6 மாதத்திற்கு ஒரு முறை (தற்பொழுது ஆண்டுக்கு ஒரு முறை போடக்கூடிய தடுப்பூசியும் கிடைக்கின்றது)-
5.தொண்டை அடைப்பான்2 மாத வயதில்ஆண்டுக்கு ஒரு முறைமழைக்காலத்திற்கு மு ன் நோய்க் கிளர்ச்சி ஏற்படும் இடங்களில் மட்டும் போடவும்.
6.அடைப்பான்6 மாத வயதில்ஆண்டுக்கு ஒரு முறைமழைக்காலத்திற்கு முன் நோய்க் கிளர்ச்சி ஏற்படும் இடங்களில் மட்டும்  போடவும்.


No comments:

Post a Comment

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள்

உடைந்த எழும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:அதிர்ந்து போன மருத்துவர்கள். =================================  February 7, 2019 (ப.ப) இன்றைக...

உழவர் சந்தை